தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு வண்ணமயமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி என பல பண்டிகைகள் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டாலும், இவை யாவும் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த பண்டிகைகள் ஆகும். காலம் காலமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்த திருவிழாக்கள் எல்லாம் வேறு, அவை தான் தமிழத்தின் அசலான பண்டிகைகள் தெரியுமா?
பொங்கல்
நாடு தழுவிய அறுவடைத் திருநாளான மகர சங்கராந்தி தமிழ் நாட்டில் பொங்கல் என்று அழைக்கப்படுவதும், அதற்கென தனித்தமிழ் உணர்வு கொண்டு மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த விழா போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. போகியில் பழைய பொருட்களை எரிப்பதும், பொங்கலன்று புத்தாடைகள் அணிந்து பொங்கலிட்டு கொண்டாடுவதும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரித்து வண்டி ஓட்டுவதும், ஜல்லிக்கட்டுவில் பங்கேற்பதும், காணும் பொங்கலன்று பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதும், குடும்பத்தினருடன் வெளியே செல்வதும் மிகவும் நிச்சயம் கோலாகலமாக தானே இருக்கும்.

தைப்பூசம்
தமிழ் நாட்காட்டியில் தை மாத பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் சிவபெருமானுக்கு இளைய மகனாக முருகப்பெருமான் பிறந்தார். தமிழ்கடவுளான முருகப்பெருமான் பிறந்த நாளான தைப்பூசத்தில் விரதம் இருந்து, காவடி எடுத்துச் சென்று 'அரோகரா அரோகரா' என கோஷமிட்டு முருகனை தரிசிக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இன்றும் கூட முருகன் கோவில்களில் தைப்பூசம் மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது

மகாமகம்
மகாமகம் என்பது கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் முக்கிய தமிழ் திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழா இந்திய மற்றும் கிரேக்க பண்டிகைகளின் மகத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த மகா மக குளத்தில் நீராடுவது நாம் செய்த பாவங்களை கழுவி நமக்கு புண்ணியத்தை கொடுக்கிறது என்பது நம்பிக்கை. இதே போல மாசி மக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் பெளர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணையும் நாளை பங்குனி உத்திர திருநாள் ஆகும். இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்றாக சொல்லப்பட்டாலும், இந்த நாள் தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள். பங்குனி உத்திரத்தன்று தான் சிவன் - பார்வதிக்கும், ராமர் - சீதைக்கும், முருகன் - தெய்வாணைக்கும், பெருமாள் - மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நாளில் விரதமிருந்து கோவிலுக்கு செல்வது பல நன்மைகளை பயக்கும்.
தமிழ் புத்தாண்டு
பனிரெண்டு மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறக்கும் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இப்போதெல்லாம் எப்படி ஆங்கிலப் புத்தாண்டு மக்களால் விரும்பி கொண்டாடப்படுகிறதோ, அதை விட மகத்துவமான முறையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. நாளடைவில் ஆங்கிலப் புத்தாண்டு மீது கொண்ட மோகத்தினால் பெரும்பாலான தமிழ் மக்கள் இதனை அந்த அளவிற்கு கொண்டாடுவது இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

ஆடி பெருக்கு
அந்த காலத்தில் தமிழ் பண்டிகைகளுக்கு எல்லாம் பெரும் பண்டிகையாக இருந்தது இந்த ஆடி பெருக்கு தானாம். இந்த நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு, இனிப்புகள் செய்து, ஆற்றங்கரைக்கு சென்று பொங்கலிட்டு, புது தாலி கயிறு மாற்றிக் கொள்வார்கள். முக்கிய வேலைகள் எல்லாம் இந்த நாளில் தான் துவங்குவார்கள், ஆடி பெருக்கு அன்று துவங்கும் எந்த ஒரு விஷயமும் பெருகிக் கொண்டே போகும் என்பது நம்பிக்கை. இந்த நாளின் மகத்துவமும் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே போகிறது.

கார்த்திகை தீபம்
தமிழர்களுக்கு தீப ஒளி திருநாள் என்பது தீபாவளி அல்ல, உண்மையான தீப ஒளி திருநாள் கார்த்திகை தீபத்திருநாள் தான். தங்கள் உறவினர்களைச் சந்திப்பதும், தங்களுக்குள் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதும் இந்தப் பண்டிகைக்கு அழகு. இந்த திருவிழாவின் பின்னணியில் உள்ள கதையும் அறிய மிகவும் சுவாரஸ்யமானது. இந்த நாளில்தான் தமிழகத்தில் சிவபெருமான் பூமியில் அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. அன்றைய நாளில் வீடுகளை அலங்கரித்து, கோலமிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய உடனே வீடுகளில் விளக்கேற்றி கார்த்தி சுற்றுவது பேரின்பம் தான்!



Click it and Unblock the Notifications





