தமிழ்நாட்டில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருந்தாலும் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற இடங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளிடையே பேமஸ் ஆக இருப்பதுடன் அங்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த இடங்களை தாண்டி இயற்கை அழகும், இதமான வானிலையும், வசீகரிக்கும் சுற்றுலா ஸ்பாட்டுகளையும் கொண்ட பல அறியப்படாத, பிரபலமாகாத அழகான மலைப்பிரதேசங்கள் தமிழ்நாட்டில் உண்டு. இந்த பிரபலமாகாத அழகான இடங்கள் யாவும் உள்ளூர் மக்களுக்கும், அந்த மாவட்ட மக்களுக்கும் மட்டுமே தெரியும். அந்த சூப்பரான இடங்களைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்!

பச்சைமலை
திருச்சி, சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பச்சைமலை ஒரு அழகிய பிரபலமாகாத மலைவாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள பச்சைமலை இதமான வானிலையோடு நம்மை வரவேற்கிறது. பச்சைமலையில் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் உற்பத்தியாகி வருகின்றன. அதோடு இங்கே நீங்கள் மங்களம் அருவி, மயிலூற்று அருவி போன்ற அருவிகளிலும் குளித்து மகிழலாம். இந்த பச்சைமலையில் முந்திரி பழம், பலாப்பழம் போன்றவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இடத்திற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வத்தல்மலை
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வத்தல்மலை அந்த மாவட்ட மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களை போலவே இந்த மலையும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த வத்தல்மலை பல ஹேர்பின் பெண்டுகளுடன், பல வியூபாயின்ட்களையும், பல நீர்வீழ்ச்சிகளையும் வழங்குகிறது. இங்கே விளையும் ஆரஞ்சு, காபி மற்றும் மிளகு தோட்டங்களையும் கூட்ட நெரிசல் இல்லாமல், ஒரு நாள் ட்ரிப் சென்று வர இந்த இடம் சரியான சாய்ஸாக இருக்கும்.

ஜவ்வாது மலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஜவ்வாது மலை ஒரு அழகிய மலைபிரதேசமாகும். இங்கு நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது பீமன் அருவியும் கோமட்டேரி ஏரி பூங்காவும் தான், இந்த ஏரியில் படகு சவாரி செய்ய மிஸ் பண்ணிடாதீங்க. கூடவே இந்த மலையில் இருக்கும் வைக்கம் பாப்பு ஆய்வகத்தை ஆராயுங்கள். குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படும் வாளியர்கள் வாழ்ந்த வாளியம்பாறையையும் இங்கே நீங்கள் காணலாம். இந்த இடத்திற்கு நீங்கள் போளூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை வழியாக அணுகலாம்.

பன்றிமலை
திண்டுக்கல்லின் பழனிமலை தொடரில் அமைந்துள்ள பன்றிமலை அதன் இதமான வானிலைக்காகவும், அழகிய வியூபாயின்ட்களுக்காகவும் மினி கொடைக்கானல் என்றழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மெயினில் இருந்து 50 கிமீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் அமைந்துள்ள பன்றிமலை பல நீர்வீழ்ச்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும், வியூபாயின்ட்களையும் கொண்டுள்ளது. இந்த இடத்தில் ட்ரெக்கிங் செய்வதும் கேம்பிங் செய்வதும் மிகவும் அருமையான அனுபவத்தை கொடுக்கும். கூட்டம் இல்லாத ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடம் தன் பெஸ்ட் சாய்ஸ்.

தாமரைக்கரை மலைப்பகுதி
இந்த மலை, ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஈரோடு மெயினில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள தாமரைக்கரை மலைப்பகுதியில் நீங்கள் வறட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் தான். அங்கிருந்து மலை உச்சிக்கு சென்று முழு காட்சியையும் பார்த்து ரசிக்கலாம், கூடவே பைக் ட்ரிப் செல்ல ஆசைப்படுபவர்கள், பர்கூர் மற்றும் ஊசிமலை வரையில் செல்லலாம்.

அய்யூர் சுற்றுச்சூழல் பூங்கா
இந்த இடம் ஓசூரில் இருந்து 42 கிமீ தொலைவில், 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இந்த இடத்தின் வானிலை மிகவும் இதமாகவே இருக்கிறது. இந்த இடம் யானைகள் வாழக்கூடிய ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அதனால் சாமேரி ஏரியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகளையும், மற்ற விலங்குகளையும் நீங்கள் கண்டு மகிழலாம். இந்த மலைப்பகுதியில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும், வியூபாயின்ட்களும் உள்ளன. அதோடு இங்கே தங்குவதற்கு காட்டேஜ் வசதிகளும் உள்ளதால் நீங்கள் இரவு தங்கியும் இங்கு சுற்றிப் பார்க்கலாம்.

சித்தேரி மலை
தருமபுரி மாவட்டத்தின் அரூரில் இருந்து 25 கிமீ தொலைவில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்கு நாம் சித்தேரிக்கு செல்லும் வழியிலேயே வள்ளிமதுரை அணை, சித்தேரி நீர்வீழ்ச்சி, ஆணைமடுகு அணை மற்றும் ஆணைமடுகு நீர்வீழ்ச்சியையும் காணலாம். தருமபுரி மாவட்டத்தில் இருந்து சூப்பரா ஒரு நாள் ட்ரிப் செல்ல இது ஏற்ற இடமாகும்.

திம்பம் மலைப்பகுதி
இந்த மலைப்பகுதி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது, அதனால் இந்த வழியே செல்லும் போது நீங்கள் காட்டு யானைகள், புலிகள் ஆகியவற்றை காண நேரிடும். அங்கிருந்து பவானி சாகர் அணையையும் பார்த்து ரசித்து விட்டு 27 ஹேர்பின் பெண்டுகளை கடந்தால் நீங்கம் திம்பம் மலைப்பகுதியை அடைந்து விடுவீர்கள். த்ரில்லா ஒரு சாகச ட்ரிப் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு இந்த இடம் தான் பெஸ்ட் சாய்ஸ்.



Click it and Unblock the Notifications





