தமிழ்நாடு பல பசுமையான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், நதிகள், அழகிய கிராமங்கள் நிறைந்த மாநிலம். குறிப்பாக தமிழகத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்து ஆட்டம் போடுவார்கள். தமிழகத்திலும் தலையாறு நீர்வீழ்ச்சி தொடங்கி, சுருளி, சிறுவாணி, கிளியூர், பைகாரா, திறப்பரப்பு, அகஸ்தியர், வட்டப்பாறை, கும்பக்கரை, குற்றாலம் என நீர்வரத்து கொண்ட ஏகப்பட்ட அழகான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில் சில நீர்வீழ்ச்சிகளுக்கு நீங்கள் எல்லா காலங்களிலும் செல்ல இயலாது. பருவமழைக் காலத்தில் அதிகப்படியான நீர்வரத்து மற்றும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் சில பிரபலமான அருவிகள் மூடப்படும், அந்த அருவிகளுக்கு நீங்கள் இப்போதே சென்று வருவது தான் சிறப்பு!

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருவது வழக்கம். இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அவற்றிற்கு எல்லாம் டாப் ஹாட்ஸ்பாட்டாக இருப்பது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தான்.
கிட்டத்தட்ட 300 அடி உயரத்தில் இருந்து ஆர்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மருத்துவ குணம் நிறைந்தது என்று நம்பப்படுகிறது. அருவியில் குளித்துவிட்டு அங்கேயே கிடைக்கும் மூலிகை சூப்பை அருந்தினால் ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கிறது என பெரும்பாலோனோர் கூறுகின்றனர். இந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் பருவமழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கொட்டுவதால் அருவியில் குளிக்க தடை செய்யப்படுகிறது.

சுருளி நீர்வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்தில் இருந்து 18 கிமீ தூரத்தில் அமைந்துள்ள் சுருளி அருவி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும். ஹைவிவேஸ் மலைப் பகுதியில் இருக்கும் தூவானம் ஏரியில் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக மூலிகை செடிகளில் கலந்தபடி ஓடி வந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.
40 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் பருவ மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நீர்வரத்துடன் கற்களும் சேர்ந்து வந்து விழுகின்றன. இதனால் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அவ்வப்போது தடை விதிப்பது வழக்கம்.

குற்றாலம் அருவி
"தென்னிந்தியாவின் ஸ்பா" என்று செல்லமாக அழைக்கப்படும் குற்றாலம் அருவிகளில் இருந்து விழும் நீர் பல அற்புத மூலிகைகள் காரணமாக மருத்துவ பண்புகள் நிறைந்து விளங்குகிறது. சித்ரா, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளால் ஆன இந்த நீர்வீழ்ச்சி 60 மீ - 92 மீ உயரத்தில் கொட்டுகிறது. பிரதான அருவி தொடங்கி சித்தருவி, தேனருவி, புலியருவி என ஒன்பது அருவிகள் குற்றாலத்தில் உள்ளன.
சந்தேகத்திற்கு இடமின்றி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கும் குற்றாலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் அதிக மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கின்ற வேளையில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதிகமான வெள்ளத்தில் அருவிகள் மூழ்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் யாரும் குளிப்பதற்கு அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

கும்பக்கரை அருவி
தேனியில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி தேனியின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். எங்க பார்த்தாலும் பச்சை பசேல் மரங்கள், இனிமையான காற்று, இதமான வானிலைன்னு நம்மை மனசை கொள்ளயடிக்குற மாதிரியான ஒரு ஸ்பாட் தான் இந்த கும்பக்கரை அருவி. நீர்வீழ்ச்சியின் படிக-தெளிவான நீர் இயற்கை தாதுக்கள் மற்றும் மூலிகைகளால் செறிவூட்டப்பட்டுள்ளது, இது நம்பமுடியாத சிகிச்சை நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஜில்லென்ற தண்ணீரை விட இங்கு சிறப்பாக இருப்பது இயற்கையாகவே உருவாகியிருக்கும் பள்ளங்களும், வழுக்கும் வழிகளும் தான்.
பருவமழை நேரங்களில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் குளித்தால் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்காக கும்பக்கரை அருவியில் குளிக்க தடை செய்யப்படுவது வழக்கம்.

ஒகேனக்கல் அருவி
தமிழகத்தின் மிக முக்கியமான அருவிகளில் முதன்மையானது தருமபுரியில் அமைந்திருக்கும் ஒகேனக்கல் அருவியாகும். இது ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளதை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்குவந்து செல்வது வழக்கம். ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
பருவமழை காலங்களில் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் பரிசல் செய்வதும், அருவிகளில் குளிப்பதும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும். நீங்கள் மேற்கூறிய அருவிகளுக்கு எல்லாம் பருவமழைக்கு முன்னரே சென்று வருவது சிறப்பு!



Click it and Unblock the Notifications





