நமக்கு எல்லாம் தமிழ்நாட்டுக்குள் இருக்கிற மலை வாசஸ்தலங்கள் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காடு தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் உண்மையில் இவற்றை விட குளிர்ந்த வானிலையும், ஜில்லென்ற காற்றும், அழகான சுற்றுலாத் தலங்களையும் கொண்ட இடங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் கட்டாயம் வருகை தர வேண்டும்! எதற்காக தெரியுமா?
அமைதியான, அழகான சுற்றுலா வழங்கும் மாஞ்சோலை
மாஞ்சோலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இந்த மலைவாசஸ்தலம் தேயிலை தோட்டங்களுக்கும் தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள மலைகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,162 மீட்டர்கள். தோட்டங்களில் பல்வேறு வகையான தேயிலைகள் வளர்க்கப்படுகின்றன. மாஞ்சோலை அதன் அற்புதமான அழகுக்காக நன்கு அறியப்பட்டதாகும். எனவே, நீங்கள் ஓய்வெடுக்க ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த இடம் மிகவும் பொருத்தமானது.
வானிலையில் ஊட்டியை மிஞ்சும் மாஞ்சோலை
மாஞ்சோலையின் தோட்டங்களில் பல்வேறு வகையான தேயிலை பயிரிடப்படுகிறது. இயற்கை அழகு, தட்பவெப்ப நிலை மற்றும் அமைதியான சூழ்நிலை காரணமாக இந்த இடம் உதகமண்டலத்துடன் ஒப்பிடப்படுகிறது. இந்த இடத்தின் அமைதி மக்களுக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. மாஞ்சோலையில் உள்ள அப்பர் கோதையார் அணை மற்றும் குதிரைவெட்டி என்று அழைக்கப்படும் காற்று வீசும் காட்சிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

வணிகச் சுற்றுலாவால் தீண்டப்படாத இயற்கை அழகு
மாஞ்சோலை என்ற பெயரை பலமுறை நாம் கேள்விப்பட்டு இருப்போம், இங்கே நிலவும் அழகிய வானிலைக்காகவே இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது பொது மக்களிடையே அவ்வளவு பிரபலமா என்று யோசித்தால் அது தான் இல்லை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளே அமைந்து இருக்கும் இந்த சிறு அழகிய கிராமத்தைச் சுற்றி ஏராளமான இடங்கள் உள்ளன. கிராமத்தில் நிலவும் மிதமான காலநிலை, உங்களைத் தொட்டுச் செல்லும் மேகங்கள், எங்கு பார்த்தாலும் உலவும் மயில்கள், லேசான சாரல் துளிகள் என உங்களது மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறுவதை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.
எத்தனை அழகான சுற்றுலாத் தலங்கள் மாஞ்சோலையில்
நாலுமூக்கு மற்றும் ஊத் தோட்டத்தை அடுத்து குதிரைவெட்டி காட்சிமுனை அமைந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையின் பசுமையான காடுகளை பார்க்கலாம். மாஞ்சோலைக்கு அருகிலுள்ள மற்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் காக்காச்சி மற்றும் நாலுமுக்கு ஆகும். இந்த தோட்டங்கள் வழியாக செல்லும் சாலை இயற்கையின் அழகான மற்றும் அற்புதமான காட்சியை வழங்குகிறது. மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் தாசன் குளம் என்ற அழகிய தலம் உள்ளது.

சாகச மலையேற்றம் செய்ய மறக்காதீர்கள்
மலையேற்றம் செய்பவர்கள் அடர்ந்த தோட்டங்களுக்கு மத்தியில் மலையேற்றத்தை நன்றாக அனுபவிக்க முடியும். மாஞ்சோலைக்கு தனியார் வாகனங்களில் செல்ல வனத்துறையின் அனுமதி அவசியம். இந்த அழகிய மலைக்கு செல்ல அரசு பேருந்துகளும் உள்ளன. மாஞ்சோலை ஒதுக்கப்பட்ட வனமாக இருப்பதால் ஹோட்டல்களோ உணவகங்களோ இல்லை. நாலுமுக்கில் கிராம மக்கள் நடத்தும் சில சிறிய கடைகள் மற்றும் டீக்கடைகள் உள்ளன. மாஞ்சோலை எஸ்டேட்டின் அடிவாரத்தில் சிங்கம்பட்டி ஜமீன் என்ற இடத்தில் மாநில சுற்றுலாத் துறையால் தங்கும் இடம் வழங்கப்படுகிறது. குதிரைவெட்டியில் ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது, அதை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
ருசியான உணவு அருந்த மறக்காதீர்கள்
ஊத்தில் சில கடைகளும் ஹோட்டல்களும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மதிய உணவுக்கு வருகிறீர்கள் என்றால் கட்டாயம் இவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். இந்த ஹோட்டல்களின் போன் நம்பர்கள் கீழே உள்ள செக் போஸ்ட்களிலேயே ஒட்டப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் உணவும் மிகவும் கிராம பாங்கான முறையில், தூய்மையாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மாஞ்சோலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது
மழை இல்லாத நாட்களில் மட்டுமே மாஞ்சோலையைச் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும். கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வந்த காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (கார்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது என களக்காடு முண்டந்துறை, அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நீங்கள் இந்த அழகிய சுற்றுலாத் தலத்திற்கு செல்ல விரும்பினால் இப்பொழுதே கிளம்புங்கள்.



Click it and Unblock the Notifications





