உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லும் வரிசையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்த புது முயற்சி வெற்றி பெற்றதால் கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஜூன் 12 ஆம் தேதி ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படுவது மிகவும் வழக்கமாக இருந்து வருகிறது. அதை சரி செய்யவே தேவஸ்தானம் இந்த புது முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளது!

தினமும் 80,000 பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தானம் 1 மணி நேரத்திற்கு 5,500 பக்தர்கள் என்ற அடிப்படையில் அனுப்பி வைக்கிறது. அதன் மூலம் தினமும் 80,000 பக்தர்கள் வெங்கடேச பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் அதிக எண்ணிக்கையிலான பொது பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வகையில் கோவிலுக்குள் கொடிக்கம்பத்திற்கு அருகில் உள்ள வெண்டி வாக்கிலி எனும் வெள்ளிக் கதவில் இருந்து ஒரே வரிசையில் பக்தர்களை கருவறைக்கு அனுப்ப ஜூன் 12 ஆம் தேதி முதல் முறையாக முயற்சி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம்
இதன்படி ஜூன் 12 ஆம் தேதி 1 மணி நேரத்தில் 6,250க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர், இதன் மூலம் அன்றைய தேதியில் அதிக பட்சமாக 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத சாதனை ஆகும்.

ஒரே நாளில் 4 கோடியே 2 லட்சம் ருபாய் உண்டியல் காணிக்கை
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஜூன் 12 ஆம் தேதி அன்று தரிசனம் செய்த மொத்த 92,238 பக்தர்களில் 70,000 பக்தர்கள் சர்வ தரிசன வழியாகத் தான் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரே நாளில் 4 கோடியே 2 லட்சம் ருபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும் 40,400 பக்தர்கள் முடி காணிக்கை செய்தனர். 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
ஒரு பாட்டிலின் கழுத்துப் பகுதி எனும் வெள்ளிக் கதவு
தரிசனத்திற்காக கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்களின் வரிசையும், தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களின் ஒரே இடத்தில் சந்திக்கும் இடமாக வெண்டி வாக்கிலி எனும் வெள்ளிக் கதவு இருப்பதால் வெள்ளி வாயில் 'ஒரு பாட்டிலின் கழுத்துப் பகுதி' என கருதப்படுகிறது. வெள்ளிக் கதவு வழியாக ஒரே வரிசையில் பக்தர்களை அனுப்பியதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பொது பக்தர்கள் தரிசனம் பெற்றதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தினசரி மாற்றம் கொண்டு வரப்படும்
ஒவ்வொரு நாளில் வரும் பக்தர்களின் கூட்டத்தைப் பொருத்து தரிசன வரிசைகளின் விதிமுறைகளில் அவ்வப்போது கொண்டு வரப்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது என தேவஸ்தான் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
2, 3 நாட்களுக்கு தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 2 நாட்கள் வரை கூட தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாத சேவை மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் திருப்பாவாடை சேவையிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றம் செய்தது.

இனியும் கூட்டம் அதிகமாக வரலாம் என கணிப்பு
கோடை விடுமுறையின் கடைசி நாளான ஜூன் 12 ஆம் தேதி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. திருப்பதி திருமலையில் அன்றைய தேதியில் காத்திருப்பு அறைகளையும் தாண்டி ஒரு கிலோமீட்டருக்கும் மேல் வரிசையில் காத்திருந்தனர். சுவாமி தரிசனத்திற்கு ஏறக்குறைய 24 மணி நேரம் ஆனது என்று கூறப்படுகிறது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஜூலை 15 வரை பக்தர்களின் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இனி நீங்களும் சுலபமாக பொது வழியில் சுவாமி தரிசனம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications





