ஊர் சுற்றுவது என்றால் நம்மில் யாருக்குத் தான் பிடிக்காது? எல்லோருக்குமே இஷ்டம் தான், சிலருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது பிடிக்கும், சிலருக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும், இன்னும் சிலருக்கு தனியாக செல்வது மிகவும் பிடிக்கும். இந்தப் பதிவு முற்றிலும் தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்குத் தான்!
தனியாக சுற்றுலா செல்வது ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும், மனச் சோர்வை நீக்கும், உங்கள் ஆன்மாவிற்கு உயிரூட்டம் அளிக்கும், நீங்கள் யாரென்று உங்களுக்கே புதியதாய் ஒரு நம்பிக்கை பிறக்க வைக்கும்.
செலவும் ஆகக் கூடாது, விடுமுறையும் அதிகமாக எடுக்க முடியாது, ஆனாலும் வேலைப்பளு மற்றும் வாழ்வில் உள்ள டென்ஷனில் இருந்து சற்று விடுப்பட்டு ஒரு இடைவெளி எடுத்தால் சுகமாக இருக்கும் இல்லையா?
தமிழ்நாட்டிலியே பட்ஜெட் ஃபிரண்ட்லியாக சுற்றுலா செல்ல பல இடங்கள் உண்டு, நீங்கள் எந்த பாலினத்தவராக இருந்தாலும், இந்த இடங்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானது, அதிக செலவு இழுக்காது. நீங்கள் ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டோ அல்லது வார இறுதி நாட்களிளோ இந்த ட்ரிப்பை ப்ளான் பண்ணலாம். தமிழ்நாட்டில் உள்ள சோலோ ட்ரிப் டெஸ்டினேஷன்களின் லிஸ்ட் இதோ!
புதுச்சேரி
சென்னையில் இருந்து 140 கிமீ தொலைவில் அமைந்துள்ள புதுச்சேரியை இரண்டு வெவ்வேறு வழிகளான புறவழிச்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியே அணுகலாம். இங்கே இருக்கின்ற பிரஞ்சு பாணியில் உள்ள கட்டிடங்கள், பிரஞ்சு கஃபேக்கள், ஆசிரமம், ஆரோவில் சுற்றுலா, வித விதமான கடற்கரைகள், கோவில்கள் என உங்கள் பொழுது போவதே உங்களுக்கு தெரியாது.
இங்கு பாதுகாப்பான, குறைந்த விலையில், நகருக்கு உள்ளேயே பல தாங்கும் விடுதிகள் உள்ளன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் ரூம் வாடகை எடுத்துக் கொள்ளலாம், மேலும் இங்கு சுற்றி பார்ப்பதற்கு இரண்டு சக்கர வாகனங்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. எந்த ஒரு இடையூறும் இன்றி, நீங்களே எல்லா இடங்களுக்கும் தானாக சென்று வந்து விடலாம்.
இங்கு இருக்கும் போது நேரு வீதியில் ஷாப்பிங் செல்ல மறக்காதீர்கள், பல வகையான உணவுகளை ருசிக்க மறக்காதீர்கள்.
மகாபலிபுரம்
அமைதி, வசீகரிக்கும் சூழல், பல அழகான வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் மரங்களால் நிறைந்த மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தில் ஒன்றாகும். சென்னையில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள மகாபலிபுரத்தை பொது பேருந்து, டாக்ஸி மற்றும் சொந்த வாகனத்திலோ அணுகலாம்.
கடற்கரை கோயில், செதுக்கப்பட்ட குகைகள், பாறையில் குடைந்தெடுத்த சிற்பங்கள், ஐந்து ரதம், மலையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் ஆகியவற்றை இங்கே கண்டு அதன் அழகில் நீங்கள் திளைப்பீர்கள்.
நீங்கள் இங்கே ஒரு நாள் முழுவதும் சுற்றி திரியலாம், அல்லது மலிவான ரூம் வாடகை கொண்ட பல்வேறு ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றில் தங்கி, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். இரவில் அங்கே கிடைக்கும் சுவைமிகு கடற்கரை உணவுகளை ருசிக்கலாம், ஷாப்பிங் செய்து மகிழலாம். உங்களின் நேரம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஊட்டி
கோயம்பத்தூரில் அமைந்துள்ள மலைகளின் ராணியான ஊட்டி தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தேயிலை தோட்டங்கள், அமைதியான நீர்வீழ்ச்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் நாட்டுப் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலை ஆகியவற்றால் நிறைந்திருக்கும் ஊட்டி அனைவருக்கும் சரியான ஓய்வு தரக் கூடிய இடமாகும்.
கோயம்பத்தூரில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது மனதிற்கும் கண்களுக்கும் இனிமையாக இருக்கும். ஊட்டியில் மலிவான விலையில் நிறைய ரிசார்ட்டுகள் உள்ளன. இரண்டு நாட்கள் தங்கியிருந்து இனிமையான வானிலையை அனுபவித்து மகிழ்ந்து நீகள் ட்ரிப்பை முடிக்கலாம்.
கொடைக்கானல்
வசீகரம் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை சாரலில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலத்தைப் நீங்கள் பார்வையிடும் போது, நீங்கள் கற்பனை செய்த ஒவ்வொரு துளியும் நிஜமாக இருப்பதைக் காணலாம்.
கொடைக்கானல் என்பது தினசரி நகர வாழ்க்கையின் கடுமையிலிருந்து ஓய்வு எடுக்க நீங்கள் செல்லக்கூடிய ஒரு இடமாகும், மேலும் இந்த மலைப்பகுதியில் நீங்கள் பைக்கிங் அல்லது ட்ரெக்கிங் பாதைகளில் செல்லும்போதோ அல்லது சுற்றியுள்ள பரந்த காடுகளின் வழியாக உலா செல்லும்போது இயற்கையோடு நீங்கள் இனைந்து இருப்பதை நிச்சயம் உணருவீர்கள்.
கொடைக்கானல் ஏரி, சில்வர் கேஸ்கேட் ஃபால்ஸ், பிரையன்ட் பார்க், டால்பின் நோஸ், கிரீன் வேலி வியூ, கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி, தலையார் நீர்வீழ்ச்சி, பேரிஜாம் ஏரி, கேனோபி ஹில், பாம்பர் ஃபால்ஸ், கோக்கர்ஸ் வாக் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கொடைக்கானலில் பல பட்ஜெட் ஃபிரண்ட்லி ஹோட்டல்களும் ஹோம் ஸ்டேகளும் உள்ளன. உங்கள் வசதிற்கு ஏற்றார்போல் ஒன்றை தேர்ந்தேடுத்து தங்கி அழகாக பொழுதைப் போக்குங்கள்.
ஏற்காடு
பசுமையான சிகரங்கள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், தோட்டங்கள் மற்றும் பல அழகிய காட்சிகளோடு ஏற்காடு நம்மை வரவேற்கிறது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஏற்காடு ஏரி, லூப் ரோடு, பகோடா பாயின்ட், கரடி குகை, பகோடா பாயின்ட், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், கொட்டச்சேடு தேக்கு காடு, கிள்ளியூர் அருவி ஆகியவற்றை நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும்.
மேலும் திருநெல்வேலி, வால்பாறை, மாசினக்குடி, பொள்ளாச்சி, தென்காசி ஆகியவையும் தனியாக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களாகும்.