
'டிரான்கிபார்' என டேனிஷ்க்காரர்களால் அழைக்கப்பட்ட தரங்கம்பாடி தன்னுள் பெரும் வரலாற்று சிறப்புக்களையும்,பழமையான அடையாளங்களையும் இன்றும் தாங்கி நிற்கிறது. 1620 முதல் 1845 வரை டேனிஷ் காலனியாக விளங்கிய இந்த நகரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் கிறிஸ்தவர்களின் புனித நூலான 'பைபிள்' அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

டேனிஷ் கால அலுவலக கட்டிடம் Photo: Joseph Jayanth
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தரங்கம்பாடி நகரம் அதிக இரைச்சல் இல்லாமல் அமைதியாக சில வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிபார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாகும்.

மணிவண்ணீசுவரமுடையார் கோயில் Photo: Sankara Subramanian
கி.பி. 1306ல் குலசேகரபாண்டியன் என்ற மன்னன் இவ்வூரை தோற்றுவித்து மணிவண்ணீசுவரமுடையார் என்ற நாமம் உடைய சிவ பெருமானின் கோயில் ஒன்றையும் தொற்றுவித்திருக்கிறான். இதனாலேயே இந்த ஊர் குலசேகர பட்டணம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறது.

டென்ச்போராக் கோட்டை Photo: Joseph Jayanth
இங்கு டேனிஷ்க்காரர்களால் கடற்க்கரை ஓரத்தில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை இந்நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். டென்ச்போராக் கோட்டை என்பது இதற்க்கு சூட்டப்பட்ட பெயராகும். 1845ஆம் ஆண்டு தரங்கம்பாடியுடன் சேர்த்து இக்கோட்டையையும் டேனிஷ்க்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் விற்ற பிறகு இதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது.
சுதந்திரத்துக்கு பிறகு அரசு அலுவலகமாக செயல்பட்டு வந்த இக்கோட்டை 1978ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை இதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது.

கோட்டையினுள் இருக்கும் அருங்காட்சியகம் Photo: Mukulfaiz
மேலும் இந்த கோட்டையினுள் டேனிஷ்க்காரர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை உடைய சிறு அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கே அவர்கள் பயன்படுத்திய வாள்கள், ஈட்டிகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை நாம் காணலாம்.

டேனிஷ் சார்ச் Photo: Chenthil
தமிழ்நாட்டில் முதன் முதலில் கிருத்துவ மிஷனரிகள் ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று என்பதினால் நாம் இங்கே ஏராளமான சர்ச்சுகளை பார்க்கலாம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பரபரப்பான துறைமுகமாக இந்த ஊர் விளங்கியதாம். இன்று அதற்க்கு சான்றாக ஓரிரு சுவர்கள் மட்டுமே எஞ்சியிருகின்றன.
சென்னை நகரில் இருந்து வெறும் 291 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதால் வார விடுமுறையை கழிக்க இங்கு நிச்சயம் சென்று வரலாம். இந்தியாவில் டேனிஷ் காலனியகத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு தரங்கம்பாடி மட்டுமே ஒரே வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி அடையலாம்?
தரங்கம்பாடியை சாலை வழியாக அடைவதே சிறந்ததாகும். அதன்படி சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 45 இல் நேராக தின்டிவனம் வந்து அங்கிருந்து சிதம்பரம் வழியாக தரங்கம்பாடியை அடையலாம்.



Click it and Unblock the Notifications






