இமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கும். இவற்றுள் இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் சூழல் பெரிதும் பாதிக்கப்படாமல் நுரைபொங்கும் பனிபோல் காட்சியளிக்கும் இந்த பகுதி குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா ?. அடுத்த முறை இமாச்சலப் பிரதேசத்திற்கு ஹனிமூனோ, சுற்றுலாவோ எப்படிச் சென்றாலும் இந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தவறிவிடாதீர்கள்.
கின்னார்
கின்னார்
கின்னார் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஓர் சிறிய மாவட்டமாகும். இங்குள்ள கல்பா என்னும் கிராமம் மாபெரும் இமயமலையின் பள்ளத்தாக்குகள் மீது ஆர்ப்பரித்து கொண்டு, அழகிய சட்லெஜ் நதி பாயந்தோடும் அழகிய பகுதியாகும். மகதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தப் பகுதி 6-ம் நூற்றாண்டில் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்து பின் பல்வேறு ஆட்சி மாற்றங்களை சந்தித்துள்ளது.
கைலாச மலை
கின்னரின் கைலாச மலை என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் சிவனுக்கான கைலாஷ் மலையானது கல்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. குறிப்பாக, உள்ளூர் மக்களால் புனிதமான இடமாக கருதப்படும் இத்திருத்தலத்திறகு சிவ பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த மலையின் மீது வீற்றுள்ள சிவலிங்க சிலை வருடம் முழுவதும் எண்ணற்ற பக்தர்களையும் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கிறது.
ஆப்பிள் தோட்டங்கள்
ஜம்மு, இமாச்சலம் என்றாலே ஆப்பில் பழங்கள் அதிகம் விளையக்கூடிய பகுதிகள் தானே. கல்பா பகுதியும் ஆப்பில் தோட்டங்களுக்கு புகழ்பெற்றதாகவே உள்ளது. இங்கே பனிமலைகளின் நடுவே உள்ள பசுமைக் காடுகள் முழுவதும் ஆப்பில் தோட்டங்கள் நிறைந்து காணப்படும். ஆப்பில் தோட்டத்தைக் கடந்து சென்றால் தற்கொலை முனையும் ஒன்று உள்ளது. நீங்கள், மலையேற்ற சாகச விரும்பியாக இருந்தால் அப்ப உங்களுக்கான இடம் இதுதான்.
சாங்லா பள்ளத்தாக்கு
கடல் மட்டத்திலிருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரத்தில் கின்னரில் அமைந்துள்ளது சாங்லா பள்ளத்தாக்கு. மாபெரும் பிரம்மாண்டமான ஊற்றுகளுக்கு நடுவே, பஸ்பா நதிக் கரையில் சாங்லா பள்ளத்தாக்கு உள்ளது. பனி மூடிய மலைகளும், இடையில் தோன்றும் பசுமைப் புற்களும் என இப்பகுதியை மேலும் அழகூட்டுகின்றன. இப்பகுதியில் இருந்து சில மைல் தொலைவிலேயே கில்பா, காம்ரு கோட்டை, நாகா கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
எப்படிச் செல்வது ?
சிம்லா ரயில் நிலையம் கல்பா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சிம்லா இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 244 கிலோ மீட்டர் தொலைவில் கல்பா கிராமம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து கல்பா மலைப் பிரதேசத்தை அடைய உள்ளூர் வாடகைக் கார்கள் உள்ளன. மேலும், இந்திய- திபெத் நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 22 வழியாக சுற்றுலாப்பயணிகள் போவாரி என்ற இடத்தில் இருந்து கல்பாவிற்கு செல்லாம்.