உலகப்பிரசித்தி திருமலை வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்கதர்கள் வருகை தருகின்றனர். எப்பொழுதும் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருந்தாலும், அவர்களுக்கு உணவு, தங்குமிடம், ஓய்வறை, சாமி தரிசனம், மருத்துவம் என பக்தர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறம்பட செய்து வருகிறது. அதற்காக மாதம் ஒருமுறை தேவஸ்தானம் சார்பில் பொது மக்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும். அதே போல சமீபத்தில் நடந்து முடிந்த கருத்து கணிப்பின் படி நிறை குறைகள் கண்டறியப்பட்டதோடு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

பக்கதர்கள் குறை கேட்பு கூட்டம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதத்திற்கு ஒருமுறை ஒரு மணி நேரம் நேரடி ஒளிபரப்பில் பக்தர்களிடம் நிறை குறைகள் கேட்டறியப்படும். அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரிகளிடம் கூறினார்கள். அதே போல சமீபத்தில் நடந்து முடிந்த பக்கதர்கள் குறை கேட்பு கூட்டத்தில் பக்தர்கள் தங்கள் அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் அதிகாரிகளிடம் கூறினார்கள். அதனை அடிப்படையாக வைத்து சில முக்கிய முடிவுகளை தேவஸ்தானம் எடுத்துள்ளது.

வெளியான முக்கிய அறிவிப்புகள்
மற்ற மாதங்களை விட இந்த மாத குறை கேட்பு கூட்டத்தில் பக்தர்கள் நீண்ட நாட்களாக தங்கள் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்விகளை தேவஸ்தான அதிகாரிகளிடம் தொடுத்தனர். பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சில முக்கிய அறிவிப்புகளையும் மகிழ்ச்சியான செய்திகளையும் வெளியிட்டனர். பக்தர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு தேவஸ்தானம் அளித்த பதில்களும் இதோ!

பல்வேறு இடங்களில் பக்தர்களிடம் பண வசூல்
முடி காணிக்கை செய்யும் இடங்கள், திருமணம் நடக்கும் இடங்கள், வரவேற்பு நடக்கும் இடங்கள் போன்றவற்றில் பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனரே? இது பற்றி தேவஸ்தானம் அறியுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை இனி பக்தர்கள் எதிர்கொண்டால் உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும். அதோடு விஜிலென்ஸ் கண்காணிப்பை அதிகப்படுத்துவதாகவும் தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மற்றும் புரோக்கர்கள் மீது விஜிலென்ஸ் வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 வழக்குகள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளன.

முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ளும் ஊழியர்கள்
சில தேவஸ்தான ஊழியர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். பக்தர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் புக் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள்
ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பேமென்ட் கேட்வேயில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ஆசைப்பட்ட நேரத்தில் தரிசனம் புக் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இ-தர்ஷன் கவுண்டர்களை திறந்து வைத்து தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று பக்கதர்கள் கேட்டுக் கொண்டனர். ரூ. 300 தரிசன டிக்கெட் முன்பதிவு தொடர்பாக இணையத்தளத்தில் எந்தப் பிழையும் இல்லை. ஜியோவுடன் இணைந்து கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். 30 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட TTDevasthanams என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் சரிவர கிடைப்பது இல்லை
ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் முறையில் செய்வா டிக்கெட்டுகள் புக் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தாலும் நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்து வருகிறது. இது ஏன் என பக்தர்கள் கேட்டனர். எலக்ட்ரானிக் டிப் 100 சதவீதம் வெளிப்படையானது என்றும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் புக் செய்ய முயல்வதால் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், எம்பெருமானின் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு நிச்சயம் டிக்கெட் கிடைக்கும் என தேவஸ்தானம் சார்பில் பதில் கூறப்பட்டது.

திவ்ய தரிசன டோக்கன்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்
நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அது குறித்து பதில் தெரிவித்த தேவஸ்தானம் திவ்ய தரிசன டோக்கன்கள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் நாள்பட்ட ஆடுதும நோயாளிகளை அனுமதிப்பது, திருமலை அன்னபிரசாத கட்டிடத்தில் பிரசாதம் வீணாகாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுப்பது, தனியார் டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது, இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அனைத்திற்கும் தக்க நடவடிக்கைகள் கூடிய சீக்கிரம் எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீவாணி டிக்கெட் புக் செய்பவர்களுக்கு தங்குமிடம்
ஸ்ரீவாணி டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு தரிசனத்திற்கு வருகிறோம். ஸ்ரீவாணி நன்கொடையாளர்களுக்கு அறைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நன்கொடையாளர்களுக்கும் அறைகளை முன்பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.

பாஞ்சஜன்யம் ஓய்வு இல்லத்தில் இருந்து வாகன இயக்கம்
திருமலையில் உள்ள பாஞ்சஜன்யம் ஓய்வு இல்லத்திற்கு சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது. அதற்கு பதிலளித்த தேவஸ்தானம் பாஞ்சஜன்யம் ஓய்வு இல்லம் சற்று உள்நோக்கி உள்ளது. எனவே அங்கிருந்து வெளியே செல்ல பக்தர்கள் இலவச பேருந்துகள் மற்றும் பேட்டரி வாகனங்களை உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

நடைபாதையில் உள்ள பிரச்சினைகள்
திருமலைக்கு நடைபாதையில் பாதயாத்திரையாக வந்த சில பக்தர்கள் நடைபாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. பதில் சொல்லவும் அதிகாரிகள் இல்லை என தெரிவித்தனர். அதற்கு நடைபாதையில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல திருமலையில் தரிசன புக்கிங், ரூம் புக்கிங் போன்றவற்றில் உள்ள குறைகள் குறித்தும் பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இனி வரும் காலங்களில் அவையாவும் சரி செய்யப்பட்டு பக்தர்களுக்கு இடையூறு இல்லாத சேவை வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications





