உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஸ்ரீவாணி, டோனர், சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், சுப்ரபாத தரிசனம் என திருப்பதியில் ஏகப்பட்ட தரிசனங்கள் உண்டு. அவற்றில் பெருவாரியான திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்களுக்கு உதவியாக இருந்த திவ்ய தரிசனம் கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திவ்ய தரிசனத்தை துவங்க TTD முன்வந்துள்ளது. அதனைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ!

நிறுத்தப்பட்ட திவ்யதரிசனம்
திருமலை திருப்பதியில் கொரோனா தொற்று காரணமாக தரிசனங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. தினமும் லட்சக்கணக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் TTD கொரோனா காலகட்டத்தில் சில ஆயிர பக்க்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ரத்து செய்யப்பட்ட தரிசனங்களில் ஒன்று தான் திவ்யதரிசனம். அலிப்பிரி மெட்டு மற்றும் ஸ்ரீவாரி மெட்டு வழ்கியா நடைபாதையில் கீழிருந்து மேலே வரும் பகதர்களுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும் இந்த திவ்யதரிசனம் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கபட்டிருந்தது. திவ்யதரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் சில மணி நேரத்திலேயே திருவேங்கமுடையானை தரிசித்து விடலாம்.

கோடை விடுமுறையில் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அலிப்பிரி நடைபாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு நாளுக்கு 10000 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரி மெட்டு பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு தினமும் 500 டிக்கெட்டுகளும் வழங்கப்படுவது வழக்கம். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிகப்படியான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

துவங்கும் திவ்யதரிசனம்
கோடை விடுமுறையில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் விதமாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு திவ்யதரிசனம் வழங்கலாம் என TTD தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், விஐபி பிரேக் தரிசன டிக்கெட், ஸ்ரீவாணி டிக்கெட், சுற்றுலா டிக்கெட், விர்ச்சுவல் சேவா டிக்கெட், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவற்றின் எண்ணிக்கையை சற்றே குறைத்து திவ்ய தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்க TTD முடிவு செய்துள்ளது.

விஐபிகள் திருமலை வருவதை தவிர்க்கவும்
அதே போல, பொதுமக்கள் நலன் மற்றும் தேவஸ்தானத்தின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த 3 மாதங்களுக்கு பரிந்துரை கடிதங்களை கொண்டு வர வேண்டாம் எனவும் விஐபிகளிடம் TTD கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் இலவச தரிசனம் பெறும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக சுவாமி தரிசனம் செய்யலாம்.
கோடைக்காலத்தில் வரும் பகதர்கள் எந்த இன்னலுமின்றி சுவாமி தரிசனம் செய்ய TTD தேவஸ்தானம் பல வசதிகளை செய்து வருகிறது. அவையாவும் கீழே!
1. திருமலையில் உள்ள ரூம்கள் யாவும் சீரமைக்கப்படுகின்றன.
2. அன்னதானத்தை அதிகரிப்பதுடன் சுவாமி தரிசன வரிசையிலும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கோடை காலம் முழுவதும் திருமலையில் உள்ள முடி காணிக்கை செலுத்துமிடத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
3. பக்தர்களுக்கு தட்டுபாடு எதுவுமின்றி லட்டு பிரசாதம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

4. கோவில் மாட வீதிகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வெயில் தாக்கத்தை குறைக்க குளிரூட்டும் பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
5. அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஜலப்பிரசாதம் கிடைக்கவும், சுகாதார வசதிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
6. தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் காவல் துறையுடன் இணைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்க்கிங் வசதி செய்யப்படும்.
7. கோடைக்காலத்தில் அதிக அளவில் வருகை தரும் பக்தர்கள் சீரான முறையில் தரிசனம் செய்வதை உறுதி செய்ய மூத்த அதிகார்கள் மேற்பார்வையிடுவார்கள்.
ஏப்ரல் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கிய 40 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோடையில் திருப்பதி செல்ல நீங்களும் தயாரா?



Click it and Unblock the Notifications





