உலகப்புகழ்பெற்ற திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகின் பகுதிகளிலிருந்தும் திருப்பதிக்கு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மருத்துவம், அன்னதானம், போக்குவரத்து, காட்டேஜ் வசதி, குளியலறை, குடிநீர் என பலவற்றையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் தேவஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கீழ் திருப்பதியில் 'ரோப் கார்' சேவை அமைப்பதற்கு திருப்பதி மாநகராட்சி ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் வயதான மக்கள் நீண்ட தூரம் நடக்காமல் ரோப் காரில் பயணம் செய்யலாம்!

எப்பொழுதுமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருப்பதி
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இப்போது ரோப் கார்களை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் என்பதால் தற்போது திருப்பதியில் காணப்படும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பன்மடங்காகி வருகிறது. திருப்பதி நோக்கி செல்லும் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் அதிகப்படியான பயணிகளை கையாள்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்படும் ரோப் கார்கள்
திருப்பதி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பக்தர்கள் திருப்பதி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து திருமலைக்கு செல்கின்றனர், அல்லது அலிப்பிரி மெட்டுவை அடைந்து அங்கிருந்து வேண்டிக்கொண்டே படியேறி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருப்பதி பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு வழித்தடத்திலும், திருப்பதி பஸ் ஸ்டாண்டில் இருந்து அலிப்பிரி மெட்டு வரை ஒரு வழித்தடத்திலும் என இரண்டு வழித்தடங்களில் ரோப் கார் அமைத்து பயணத்தை எளிதாக்கும் வகையில் ரோப் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் to பஸ் ஸ்டாண்ட் , பஸ் ஸ்டாண்ட் to அலிப்பிரி ரோப்வே
திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனுடன் திருப்பதி பஸ் ஸ்டாண்டை இணைத்து ரூ.500 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டாக நவீனப்படுத்தி மாற்றியமைக்க உள்ளது. மேலும், புதிதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டில் மேல் பகுதியில் இருந்து ரோப்வே அமைக்கப்படும். அதன் அருகே ஹெலிபேடும் அமைக்கப்படவுள்ளது. பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்படும் ரோப்வே வழியாக நேரடியாக அலிப்பிரி க்கு வருவதற்கான திட்டம் தாயராகி வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்த பின்னர் விரைவில் டெண்டர் விடப்பட்டு ரோப்வே பணிகள் தொடங்கப்படும் ஏன்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த திட்டம்
கடந்த காலங்களில் அலிப்பிரியில் இருந்து படிக்கட்டு வழியாக திருமலைக்கு செல்ல ஒரு ரோப்வேயும், ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் இருந்து அவ்வாசாரி கோணம் வழியாக திருமலையை அடைய ஒரு ரோப்வேயும் அமைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. படிக்கட்டுகளில் ரோப்வே அமைப்பது என்பது கோவில்களுக்கு மேல் செல்வது போலாகி விடும், அது சரியாக வராது என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது வழி மாற்றியமைக்கப்பட்டு புதிதாக ரோப் கார்கள் திருப்பதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
ரோப்வெ வசதி ஏற்படுத்தப்பட்டால் திருப்பதி-திருமலை இடையேயான பக்தர்களின் பயணம் மேலும் இனிமையானதாக மாறிவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதைப்பற்றிய உங்களது கருத்து என்ன?



Click it and Unblock the Notifications





