1806ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்கள் கழகத்தின் மூலமாக இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் விதை தூவப்பட்ட பெருமைவாய்ந்த நகரம் வேலூர். பாலாற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்நகரம் சென்னையில் இருந்து 211 கி.மீ தொலைவில் உள்ளது. பெரும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என தமிழ் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான இங்கு, நாம் சுற்றிப்பார்க்கவும் பலவகையான இடங்கள் உண்டு. வெள்ளூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோயில், தங்க கோயில், மலை வாசஸ்தலமான ஏலகிரி போன்ற இடங்கள் வேலூரில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கலாகும். வாருங்கள், வேலூர் நகருக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம்.
Redbus.in இல் எல்லா வித பண பரிமாற்றங்களிலும் 10% தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்
வேலூர் கோட்டை:
புகைப்படம்: Nagesh Kamath
வேலுரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குவது 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வேலூர் கோட்டையாகும். பெரிய பெரிய கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டையினை சுற்றி ஆழமான ஆழி ஒன்றும் உள்ளது. அதனுள் மன்னர்கள் காலத்தில் பாதுகாப்பிற்காக ராட்சத முதலைகள் இருந்திருக்கின்றன. இந்தக்கோட்டையில் தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என சொல்லப்படும் வேலூர் சிப்பாய்கள் கழகம் 1806 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. இன்று இதனுள் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் வாட்கள், பீரங்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியராய் பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது நிச்சயம் வர வேண்டிய இடம் இந்த வேலூர் கோட்டை.
ஜலகண்டேஸ்வரர் கோயில்:
புகைப்படம்: Simply CVR
வேலுரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்று ஜலகண்டேஸ்வர பெருமானை மூலவராக கொண்ட ஜலகண்டேஸ்வரர் கோயில் ஆகும். தமிழ் நாட்டின் முக்கிய சைவஸ்தலமான இக்கோயில் திராவிட கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கோயில் உட்கூரை மற்றும் தூண்களில் நுணுக்கமான புடைப்புச்சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள சுரங்க மண்டபத்திலிருந்து ஒரு சுரங்கப்பாதை பாலாற்றை நோக்கி செல்வதாகவும் சொல்லப்படுகிறது. வேலூர் கோட்டைக்கு வருபவர்கள் தவறாமல் இந்த கோயிலுக்கும் வந்த செல்லலாம்.
வேலூர் தங்க கோயில்:
புகைப்படம்: Dsudhakar555
2007ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டதில் இருந்து வேலுரின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது லக்ஷ்மி நாராயணி அம்மன் தங்க கோயில். 600 கோடி ரூபாய் செலவில் 800 கிலோ தங்கத்தகடினால் இதன் கோபுரம் மற்றும் தூண்கள் வேய்யப்பட்டிருகின்றன. இக்கோயிலில் நுழைந்த உடனே மூல சந்நிதியை நட்சத்திர வடிவிலான பாதையில் 1.8 கி.மீ நடந்தே அடைய முடியும். மதிய நேரங்களில் சென்றால் இக்கோயில் கோபுரம் சூரிய ஒளியில் கண்ணை பறிக்கும் வெளிச்சத்துடன் மிளிர்வதை காணலாம். வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்திருப்பதால் தொடர் பேருந்து சேவைகள் உண்டு. ரயில் மூலம் எனில் காட்பாடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள தங்க கோயிலை பேருந்து அல்லது வாடகை கார் மூலம் வந்தடையலாம்.
மதராஸாயே மொஹமதியா மஸ்ஜித்:
மதராஸாயே மொஹமதியா மஸ்ஜித் அல்லது நவாப் சந்தா சாஹிப் மசூதி என்றழைக்கப்படும் இந்த மசூதியானது வேலுரின் முக்கிய வரலாற்று தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 1750 ஆண்டு கட்டப்பட்ட இம்மசூதி தமிழ் நாட்டில் இருக்கும் மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றாகும். மசூதியின் நான்கு புறங்களிலும் அலங்கார வளைவுகள் உள்ளன. மசூதியின் பின்பகுதியில் பக்தர்கள் வணங்கும் மெஹ்ராப் அமைந்துள்ளது. அதன் வலப்புறத்தில் தொழுகை நெறியாளருக்கான பீட அமைப்பு காணப்படுகிறது. கலையம்சம் நிரம்பிய மலர் அலங்கார தோரண சித்தரிப்புகள் இந்த மசூதி முழுவதும் நிரம்பியுள்ளன.
ஏலகிரி:
புகைப்படம்: Ashwin Kumar
கடல்மட்டத்தில் இருந்து 1400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது ஏலகிரி மலை. ஊட்டி, கொடைக்காணல் போன்று சுற்றிபார்க்க அதிக இடங்கள் இங்கு இல்லாவிடினும் பாராக்ளிடிங் மற்றும் மலையேற்றம் இங்கு பிரபலமாகி வருகிறது. தவிர ட்ரெக்கிங் செய்பவர்களின் ஆதர்ஷ இடமாகவும் ஏலகிரி மலை மாறிவருகிறது. இங்கிருக்கும் ஏலகிரி ஏரி மாலை நேரத்தில் அந்தி மங்கும் வேலையில் அற்புதமான இயற்கை காட்சிகளை நமக்கு வழங்கும்.
புகைப்படம்: Dome Poon
அப்படியே வேலூரில் பேமஸ் ஆன ஆம்பூர் பிரியாணியையும் ஒரு பிடி பிடிக்க மறந்து விடாதீர்கள்