குளிர் காலத்தில் மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்வது சரியான யோசனையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் இயற்கை அழகை அதன் உச்சத்தில் இருக்கும் போது ரசிக்கவும், தனிமையான ஒரு சுற்றுலா செல்லவும், ஹனிமூன் செல்வதற்கும் குளிர்காலம் தான் பெஸ்ட் சாய்ஸ் மக்களே! குளிர் காலத்தின் மலைவாசஸ்தலங்களின் தோட்டங்களும், காடுகளும், பள்ளத்தாக்குகளும் அதன் முழுமையான அழகால் ததும்பி நிற்கின்றன. அந்த வகையில் நீங்கள் தமிழ்நாட்டுக்குள் செல்ல வேண்டிய, கம்மி பட்ஜெட் குளிர்ந்த மலைவாசஸ்தலங்களின் லிஸ்ட் இதோ!

கொழுக்கு மலை
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்கு மலை ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ள கொழுக்கு மலை பயணிகளால் அதிகம் தீண்டப்படாத அழகிய இடமாகும். எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ந்த வானிலை, போதை தரும் இயற்கை அழகு ஆகியவை உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
வால்பாறை
கோயமபுத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது. சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கோத்தகிரி
தமிழ்நாட்டின் பழமையான மலை வாசஸ்தலங்களில் ஒன்றான கோத்தகிரி, அதன் அற்புதமான காட்சிகள், தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், மலையேற்றப் பாதைகள் மற்றும் பாறை ஏறுதல் ஆகியவற்றிற்கு பிரபலமானது. இங்கே நிலவும் இனிமையான வானிலை, அழகிய கிராமப்புறங்கள் மற்றும் வாழ்க்கையின் மெதுவான வேகம் ஆகியவை பிஸியான மற்றும் குழப்பமான நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பும் மக்களை வெகுவாக ஈர்க்கின்றன. கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஜான் சல்லிவன் நினைவுச்சின்னம், லாங்வுட் ஷோலா காடுகள், கோடநாடு காட்சிப் புள்ளி, எல்க் நீர்வீழ்ச்சி மற்றும் ரங்கசாமி சிகரம் மற்றும் தூண்கள் ஆகியவை இந்த அற்புதமான மலைவாசஸ்தலத்தின் சிறப்பம்சங்களாகும்.
கொல்லி மலை
'மௌண்டெய்ன் ஆஃப் டெத்' எனப்படும் மிரட்டலான பெயர் கொண்ட இந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைவாசஸ்தலமாகும். இயற்கை அழகும் மத முக்கியத்துவமும் வாய்ந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் ஒரு ஆராயப்படாத இயற்கை அதிசயமாகும். புகழ்பெற்ற அரபளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், அகயா கங்கை நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி, மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவை இப்பகுதியின் பிரபலமான இடங்களாகும்.
மேகமலை
தேனியில் இருந்து 55 கிமீ தொலைவிலும், கூடலூரில் இருந்து 59 கிமீ தொலைவிலும், குமளியில் இருந்து 92 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள மேகமலை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய ஹில் ஸ்டேஷனாகும். 'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும்.
மசினகுடி
பசுமையான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளால் நிறைந்துள்ள மசினகுடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான மலைவாசஸ்தலமாகும். விலங்குகளை கண்டறிவது, மீன் பிடிப்பது, ஜீப்புகளில் சஃபாரி, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்வது, மாயார் ஆற்றங்கரையிள் படகு சவாரி செய்வதுடன், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையும் கண்டு களிக்கலாம்.
பன்றிமலை
பெயரே வித்தியாசமாக உள்ளது என நினைக்குறீர்களா? ஆனால் பெயருக்கும் இடத்திற்கும் சம்மந்தேமே இல்லாதது போல் தான் இருக்கும் இந்த இடம். முழுவதும் பசுமை மற்றும் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ள இந்த பன்றிமலை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறு கிராமமாகும். புள்ள வெளி நீர்வீழ்ச்சி, அமைதி சோலை நீர்வீழ்ச்சி, காமராஜர் சாகர் டேம்,ஆத்துர் டேம், பல அழகிய சிறு சிறு மலைவாழ் கிராமங்கள் என உங்கள் மனதை கொள்ளயடிக்கும் விஷயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
மாஞ்சோலை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்களேன், உங்களது சுற்றுலா நிச்சயம் மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த இடங்கள் எல்லாமே ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்கள் போல வணிகமயமாக்கம் இல்லாமல் இருப்பதால், நீங்கள் இயற்கை அழகை ரசிக்கவும், கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்லவும் ஏற்ற பெஸ்ட் சாய்ஸ் ஆகும்!



Click it and Unblock the Notifications












