இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் விசாகப்பட்டினமும் ஒன்றாகும். பொதுவாக இந்தியாவின் கப்பல் கட்டும் தளம் என்றே நாம் விசாகப்பட்டினம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம்! ஆனால் அதையும் தாண்டி விசாகப்பட்டினம் பல அம்சங்கள் நிறைந்த ஒரு அழகிய கடற்கரை நகரமாகும்.
இப்போது அதற்கு மேலும் அழகு சேர இருக்கிறது! ஆம்! விசாகப்பட்டினம் சுற்றுலாத் துறை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு பொழுதுபோக்கு நகரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்குள் பல சுவாரஸ்யமான தகவல்கள் ஒளிந்துள்ளன!

கடற்கரையோரத்தில் பொழுதுபோக்கு நகரம்
பீமிலி கடற்கரை சாலையில் தொடங்கி இந்த பொழுதுபோக்கு நகரம் ஆர்கே கடற்கரை நீளுமாம். கடற்கரையை ஒட்டியப்படி எழுப்பப்படும் இந்த பொழுதுபோக்கு நகரில், பல சுவாரஸ்யமான விளையாட்டுகளும் கேளிக்கை அம்சங்களும் நிரம்பியுள்ளது. விசாகப்பட்டினத்தை மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். பீமிலி-போகாபுரத்தை இப்பகுதியுடன் இணைக்கும் ஆறுவழிப் பாதையும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

பல கேளிக்கை அம்சங்கள் நிறைந்த நகரம்
இதில் லண்டனில் உள்ளது போன்ற பெரிய ஜியான்ட் வீல், ஒரு மிதக்கும் உணவகம், ஒரு கண்ணாடி காட்சி தளம், ஒரு பீச் ராண்ட், ஒரு சுரங்கப்பாதை மீன்வளம், ஒரு பனி சிற்ப பூங்கா, ஒரு பனி உலகம் மற்றும் இது மாதிரியான பல இடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னிலாண்ட் போன்ற ஒளிரும் தோட்டத்தையும் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேசத் தரம் வாய்ந்த நகரம்
துபாயில் இருக்கும் வாட்டர் பஸ், ஸ்கை டைவிங் சாகசங்கள் ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ஒரு டைனோசர் பூங்காவும் அமைக்கப்படவிருக்கிறது. மேலும் சர்வதேச தரம் வாய்ந்த நட்சத்திர ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளூர் உணவகங்களும் வரவிருக்கிறது. ஆம் பல வகையான, விதவிதமான சுவைமிகு உணவுகளையும் உண்டு மகிழலாம்!
விசாகப்பட்டினத்தில் இந்த புதிய சுற்றுலா தலத்திற்கான பணிகள் பல்வேறு கூறுகளில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆக, நாம் விரைவில் விசாகப்பட்டினம் செல்லும் போது இந்த பொழுதுபோக்கு சிட்டியில் குதூகலிக்கலாம்!



Click it and Unblock the Notifications




