உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை வாழ்வில் ஒருமுறையேனும் அருகில் பார்த்து விட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் ஆசையாக இருக்கிறது. அதெல்லாம் சாத்தியமா? என்று சிலர் நம்மை கேட்பார்கள்! ஆனால் உண்மையில் வழி இருக்கிறது! ஆம்! திருப்பதி பெருமாளை சாமானிய மக்களான நம்மால் கூட மிக அருகில் தரிசிக்க முடியும்! நீங்கள் கீழ்கண்ட தரிசனத்தை வெறும் ரூ.120 செலுத்தி புக் செய்தால், நீங்களும் ஏழுமலையானை மிக அருகில் மனம் குளிர தரிசிக்கலாம்!
இன்னும் சில நொடிகள் அந்த அழகு முகத்தை பார்க்க முடியாதா
சிலர் திருப்பதிக்கு சில மாதங்களுக்கு ஒரு முறை செல்கின்றனர். ஆனால் சிலரோ சில வருடங்களுக்கு ஒரு முறை தான் செல்கின்றனர். நடை பாதை பயணமாக சிலர் செல்கின்றனர். கீழே அலிப்பிரியில் இருந்து சிலர் படிக்கட்டு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் நாம் எந்த தரிசனம் சென்றாலும் 3 முதல் 30 மணி நேரம் காத்துக் கிடந்து தான் அவரை தரிசிக்கிறோம். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் கூட நம்மால் சில நொடிகளில் மட்டுமே அவரை தரிசிக்க முடிகிறது. அடடா? என்ன இது? இன்னும் சில நொடிகள் அந்த முகத்தை பார்க்க நமக்கு பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு தான் நாம் அனைவருமே கோவிலை விட்டு வெளியே வருகிறோம்.

மிக அருகில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்
இவ்வளவு கஷ்டம் எதுவும் இல்லாமல் திருப்பதி பெருமாளை உங்களால் ஒரு அடி தூரத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். அதுவும் நீங்கள் நின்று நிதானமாக சுவாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரலாம். யாரும் 'ஜருகண்டி ஜருகண்டி' என்று சொல்ல மாட்டார்கள். அதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய ஒன்று தான் 'திருமலை ஆர்ஜித சேவா'. இந்த சேவையின் கீழ் நீங்கள் ஆர்ஜித சேவா ஒன்றை புக் செய்தால் ஒரு அடி தூரத்தில் நின்று திருப்பதி பெருமாளை மனம் குளிர ரசிக்கலாம்.
டிக்கெட் புக் செய்வது எப்படி
1. ஒவ்வொரு மாதமும் 20 தேதி அளவில் ஆர்ஜித சேவாக்களுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிவிடும்.
2. முதலில் நீங்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற TTD யின் அதிகாரப்பூர்வ போர்டலில் உங்கள் மொபைல் எண் மற்றும் OTP கொடுத்து உள் நுழைய வேண்டும்.
3. பின்னர் டேஷ்போர்டில் தோன்றும் பில்கிரிம் சர்வீசஸ் பகுதியில் ஆர்ஜித சேவா பிரிவுக்குள் செல்ல வேண்டும்.
4. சேவா எலக்ட்ரானிக் டிப் என்ற பகுதி தோன்றிய உடனே அவற்றை படித்துவிட்டு தொடர வேண்டும்.
5. பின்னர் ஜெனரல் டிடெயில்ஸ் பகுதியில் உங்களது பெயர், பாலினம், வயது, முகவரி, ஆதார் போன்ற முக்கிய தகவல்களை கொடுக்க வேண்டும்.
6. உங்கள் உடன் வரக்கூடிய நபரின் தகவல்களையும் மேற்கூறியவாறு கொடுக்க வேண்டும். அதிகபட்சம் அதில் கோவிலில் பெயர் திருப்பதி ஸ்ரீவாரி கோவில் எனவும், தரிசனத்தில் அனைத்து தரிசனம் (all) என்பதையும் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
7. இரண்டு நாட்களுக்கு பிறகு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பெயர்கள் வெளிவரும்.
8. அதில் உங்கள் பெயர் இருந்தால், உடனே இந்த கட்டணம் செலுத்தி டிக்கெட்டை உறுதிப் படுத்துங்கள்.
9. இந்த டிக்கெட்டுகளை TTDயின் மொபைல் செயலி வாயிலாகவும் புக் செய்யலாம்.
10. அனைத்து சேவா டிக்கெட்டுகளையும் மாத வாரியாக வெளியிட்டு வந்த TTD தேவஸ்தானம் இப்போது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சேவைக்கான கட்டணங்கள்
1. சுப்ரபாத சேவைக்கு ஒரு நபர் ரூ.120 செலுத்த வேண்டும். இந்த சேவை அதிகாலை 4.00 மணிக்கு துவங்கும். நீங்கள் 3.00 மணிக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
2. தோமாலை சேவைக்கு ஒரு நபர் ரூ.220 செலுத்த வேண்டும். இந்த சேவை அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும். நீங்கள் 3.30 மணிக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
3. அர்ச்சனை சேவை ஒரு நபர் ரூ.220 செலுத்த வேண்டும். இந்த சேவை அதிகாலை 5.30 மணிக்கு துவங்கும். நீங்கள் 4.30 மணிக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அஷ்டதாள பாத சேவைக்கு ஒரு நபர் ரூ.1,250 செலுத்த வேண்டும். இந்த சேவை அதிகாலை 10 மணிக்கு துவங்கும். நீங்கள் 9.30 மணிக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
நீங்கள் எல்லா மாதங்களிலும் இந்த சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து வையுங்கள். கட்டாயம் அந்த பெருமாள் உங்களுக்கு ஒரு நாள் தரிசனத்தை வழங்குவார்.



Click it and Unblock the Notifications





