எப்பொழுதும் நம்ம ஊருக்கு உள்ளே சுற்றுலா சென்று வராமல் ஒரு புது விதமான இடத்திற்கு செல்லலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த இடம் ஒரு அருமையான யோசனை. இந்தியாவின் 'வெற்றி நகரம்' என்றழைக்கப்படும் விஜயவாடா ஆந்திரப் பிரதேசத்தின் வணிக, அரசியல் மற்றும் ஊடகத் தலைநகரம் என்று அறியப்படும் ஒரு முக்கிய நகரமாகும். 14 நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட விஜயவாடா பயணிகளுக்கு இரு வேறு முறையில் சிறந்ததை வழங்கும் பல கண்கவர் சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.
வெற்றியின் நகரம் - விஜயவாடா
துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து இந்த நகரத்தில் இளைப்பாறுவதாக ஐதீகம், அவள் கண்ட வெற்றியால் இந்த நகரத்திற்கு விஜயவாடா என்று பெயர் வந்தது. விஜயா என்றால் வெற்றி என்றும் வாடா இடம் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அதாவது வெற்றியின் இடம் என்று பொருள். இந்த நகரத்தை பழைய நகரம் மற்றும் புது நகரம் என இரு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் முதல் கோட்டைகள், மலைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என, விஜயவாடாவில் அனைத்து விதமான பயணிகளுக்கும் ஏதோ ஒன்று நிச்சயம் இங்கே இருக்கிறது. தனக்கே உரித்தான பல தனித்துவங்களைக் கொண்ட விஜயவாடாவின் சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ!


கனக துர்கா கோயில்
விஜயவாடாவின் வரலாற்று நகரின் அடையாளமாக திகழும் கனக துர்கா கோயில், ஒரு புனிதமான இந்துக் கோவிலாகும். மாவீரன் அர்ஜுனனால் கட்டப்பட்ட இக்கோவில் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். கிருஷ்ணா நதிக்கரையில் இன்ரகீலாத்திரி மலைகளால் சூழப்பட்டுள்ள இக்கோவிலின் தெய்வம் சுயம்பு என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு தசரா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கின்ற கனக துர்கா கோயில் நகர மையத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

உண்டவல்லி குகைகள்
4 அடுக்கு உயரம் கொண்ட ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த உண்டவல்லி குகைகள் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஒரு அழகான சாட்சியமாக நிற்கிறது. பத்மநாபா மற்றும் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த குகைகள் குப்த கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக் குகைகளுக்கு உள்ளே நீங்கள் ஆராயும் போது ஜெயின் மற்றும் பௌத்த வடிவமைப்புகளோடு, ஒரு கிரானைட் துண்டில் செதுக்கப்பட்ட சிவபெருமானின் பிரம்மாண்டமான சிலையையையும் காணலாம்.

பவானி தீவு
கிருஷ்ணா ஆற்றின் நடுவே 50 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பவானி தீவு, இந்தியாவின் மிகப்பெரிய நதித் தீவுகளில் ஒன்றாகும். வசீகரிக்கும் ஆற்றங்கரை காட்சிகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், படகு சவாரி, நீச்சல் மற்றும் பல்வேறு நீர் விளையாட்டு மற்றும் சாகச நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.

கொண்டப்பள்ளி கோட்டை
7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மூன்றடக்கு கொண்டப்பள்ளி கோட்டை, மலையின் மீது அமைந்திருப்பதால் நகரத்தின் கண்கவர் காட்சிகளை வழங்குகிறது. இந்தக் கோட்டை நகர மையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோட்டையை சுற்றியுள்ள அழகான காட்சிகள் புகைப்படக்காரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைகிறது.

கொல்லேரு ஏரி
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி என்று புகழ் பெற்ற கொல்லேரு ஏரி விஜயவாடாவில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சீசனில் உலகெங்கிலும் இருந்து புலம்பெயர்ந்த பறவைகளை இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. ஆதலால், சீசன் நேரத்தில் இரண்டு லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் ஏரிக்கு வருகை தருகின்றனர். பளபளப்பான ஐபிஸஸ், ரெட்ஷாங்க்ஸ், டீல்ஸ், பில் ஸ்டோர்க்ஸ் போன்ற பறவைகளை இங்கே கண்டு களிக்கலாம். இயற்கையுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவோருக்கு இது ஒரு அற்புதமான இடமாகும்.

பிரகாசம் தடுப்பணை
விஜயவாடாவில் உள்ள மிக முக்கியமான கட்டமைப்புகளில் ஒன்றான பிரகாசம் தடுப்பணை பிரம்மாண்டமான 160 தூண்களில் நின்று, கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களை இணைக்கிறது. ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த பாலம், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே பரவி, ஏரியின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. போட்டோ எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் சில அற்புதமான காட்சிகளைப் படம்பிடிக்க அதிகாலை அல்லது மாலை நேரங்களில் இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீர்கள்.
பெசன்ட் சாலை
விஜயவாடாவின் வணிக மையமாக விளங்கும் பெசன்ட் ரோடு பொழுதுபோக்கு, உணவு மற்றும் ஷாப்பிங் செய்வதற்கான ஒரு சிறந்த இடமாகும். மங்களகிரி புடவைகள், பாரம்பரிய ஆடைகள், மாடர்ன் உடைகள், பலதரப்பட்ட சுவையான உணவு வகைகள் என அனைத்தும் இங்கே கிடைக்கிறது. மாலை வேளையில் நகரம் உயிர்ப்புடன் இருப்பதால் மாலையில் பெசன்ட் சாலைக்கு செல்வதே சிறந்தது.

இஸ்கான் கோவில்
பரபரப்பான நகர சூழலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் இந்த இஸ்கான் கோவிலை தவறவிடக் கூடாது. கட்டிடக்கலையின் உதாரணமாக உயர்ந்து நிற்கும் இஸ்கான் கோவிலில் பளிங்கினால் ஆன கிருஷ்ணர் மற்றும் ராதையின் சிலைகள் உள்ளன.
மேலும் மொகலராஜபுரம் குகைகள், ஹஸ்ரத்பால் மசூதி, விக்டோரியா அருங்காட்சியகம், ராஜீவ் காந்தி பூங்கா, சுப்ரமணிய சுவாமி கோவில், ஸ்கிராப் சிற்ப பூங்கா ஆகியவையும் இங்கே கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.



Click it and Unblock the Notifications





