உலகிலேயே மிக உயரமான பாலம், ஒற்றுமை மற்றும் சமத்துவத்திற்கான உலகிலேயே மிகப்பெரிய சிலை, உலகிலேயே மிக உயரமான ரயில் தண்டவாளம், உலகிலேயே மிக நீளமான பாலம் என இந்தியா பல பெருமைகளுக்கு சொந்தமான நாடாகும். இப்போது கூடுதல் சிறப்பம்சமாக உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை, ராஜஸ்தானின் நாதத்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை
விஸ்வஸ் ஸ்வரூபம் என்று அதாவது நம்பிக்கையின் வடிவமாக உருவாக்கப்பட்ட இந்த சிலை உலகின் மிக உயரமான சிவன் சிலை என்று கூறப்படுகிறது. ராஜஸ்தானின் உதய்பூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாதத்வாராவில் அக்டோபர் 29, 2022 அன்று இந்த சிலை திறக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட சிலையை கட்டிமுடிக்க 10 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது திறக்கப்பட்டது.

20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்த்தாலும் கூட தெரியும்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷி மற்றும் பலர் முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சிலையை திறந்துவைத்து உரையாற்றினர். 51 பிகாஸ் பரப்பளவில் மலை உச்சியில் தியான நிலையில் இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. மூவாயிரம் டன் எஃகு மற்றும் இரும்பு, 2.5 லட்சம் கன டன் மணல் மற்றும் கான்கிரீட் அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 300க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிலையை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளனர் எனவும் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்த்தாலும் கூட தெரியும் எனவும் கூறினர்.

பல்வேறு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ள சிலை
இரவு நேரத்தில் இந்த சிலையை அனைவரும் பார்க்கும் வகையில் சிறப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் பக்தர்கள் வசதியாக சிலையை கண்டுகளிக்க முடியும். மேலும் இந்த சிலை 250 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள்
இந்த சிலையின் அருகே ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அமைப்பைக் கொண்டாடும் வகையில் நவம்பர் 6 ஆம் தேதி வரை சமய, ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் அந்த இடத்தில் நடைபெறும். இந்த சிலையைச் சுற்றி பக்தர்கள், மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, சாகச சுற்றுலாவசதிகள் , உணவுப்பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அதன் மலைக்கோட்டைகள் மற்றும் பல்வேறு அரண்மனைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை மாநிலத்தின் மத சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி நீங்கள் ராஜஸ்தானுக்கு பயணிக்கிறீர்கள் என்றால் இந்த சிலையையும் கண்டு களியுங்கள்!



Click it and Unblock the Notifications





