ராஜஸ்தானின் உதைப்பூர் மாவட்டத்தில் பனாஸ் நதிக் கரையோரத்தில் அமைந்திருக்கும் நாதத்துவாரா நகரம் 'அப்போலோ ஆஃப் மேவார்' என்ற பெயரிலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.
கலை மற்றும் கலைப் பொருட்களின் நகரம்
நாதத்துவாரா நகரம் அற்புதமான பிச்வாய் ஓவியங்களுக்காகவும், வண்ணமயமான டெர்ராகோட்டா பொருட்களுக்காகவும் வேகுப்பிரபலம். இந்த நகரில் உள்ள கலைத்தொழில் நிறுவனங்கள் 2000 ஆண்டுகள் பழமையானவைகள்.
இங்கு காணப்படும் கலை வடிவங்களில் 'மீனா வேலைப்பாடு' எனும் பாணி மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இந்த நகரத்துக்கு வரும் பயணிகள் பல்வேறு வகைப்பட்ட கைவினைப்போருட்களையும் வாங்கிச் செல்லலாம்.
பண்டையகால ஆலயங்கள்
நாதத்துவாரா நகரம் கலைகளின் பூமியாக இருக்கும் அதேவேளையில் விஷ்ணு பகவானின் அவதாரமாக கருதப்படும் பல்வேறு தெய்வங்களின் ஆலயங்களை கொண்ட புனித ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நகரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் துவார்கதீஷ் என்ற விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் செந்நிற கல்லாலான விக்ரகத்துக்காக இந்தக் கோயில் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.
மேலும் ஸ்ரீநாத்ஜி எனும் ஆலயமும் இந்தப் பகுதிகளில் வெகுப்பிரசித்தம். அதிலும் குறிப்பாக இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் சிலை ஒரே சலவைக்கல்லினால் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கும் பாங்கு சிற்பக் கலையின் உச்சம் என்றே சொல்லலாம்.
நாதத்துவாரா நகரப் பகுதிகளில் அமைந்திருக்கக்கூடிய ஏக்லிங்க்ஜி எனும் சிவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் ஜேஜேவென்று இருக்கும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கடவுள் விக்ரகம் 15-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது.
இந்தக் கோயிலில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள கலந்து கொள்வார்கள். இதுதவிர ராஜ்சமந்த், சாஹித்யா மண்டல நூலகம் மற்றும் சன்வாரியா சேத் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.
நாதத்துவாரா நகரை எப்படி அடைவது?
நாதத்துவாரா நகருக்கு வெகு அருகில் உதைப்பூரின் மகாராண பிரதாப் அல்லது தபோக் விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு வெளிநாட்டு பயணிகள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் உதைப்பூர் ரயில் நிலையமும் நாதத்துவாரா நகருக்கு அருகிலேயே உள்ளது. எனவே பயணிகள் இந்த விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக நாதத்துவாரா நகரை அடைந்து விட முடியும்.
அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத், உதைப்பூர், புஷ்கர், டெல்லி, அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் நாதத்துவாரா நகருக்கு இயக்கப்படுகின்றன.
நாதத்துவாரா நகருக்கு எப்போது பயணம் மேற்கொள்ளலாம்?
நாதத்துவாரா நகரை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. மேலும் நீங்கள் விரும்பினால் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நாதத்துவாரா நகருக்கு சிறிய பிரயாணம் ஒன்றைக் கூட மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications