ஜைனர்களுக்கான ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலம் இந்த வேணூர் ஆகும். குருபூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த சிறு நகரம் தற்சமயம் எந்த பரபரப்பும் இல்லாமல் சாதாரண நகரம் போல தென்பட்டாலும் வரலாற்றுக்காலத்தில் இது ஒரு மேன்மையான நகரமாகவும் ஜைன மார்க்கத்தின் தளமாகவும் அஜிலா ராஜவம்சத்தின் தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.
பிரசித்தி பெற்ற ஜைனப்பாரம்பரிய மையம்
வேணூர் ஆன்மீக ரீதியான முக்கியத்துவத்தை மட்டுமன்றி வரலாற்றுப்பின்னணியையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஒரு பெரிய விசேஷம் 35 அடி உயரத்தில் அமைந்துள்ள கோமதேஸ்வர பஹவானின் சிலையாகும்.
1604ம் ஆண்டு ஜைன மன்னர் திம்மண்ணா அஜிலா’வால் கட்டப்பட்டுள்ள இந்த ஒற்றைக்கல் விக்கிரக அமைப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள நான்கு ஒற்றைக்கல் கோமதேஸ்வரர் சிலைகளில் ஒன்றாகும்.
வேணூரில் இன்னும் பல ஜைன பஸாதி கோயில்களும் சுற்றிப் பார்ப்பதற்கு இருக்கின்றன. மேலும் வேணூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏழு புராதனக்கோயில்கள் உள்ளன.
இந்த எல்லாக்கோயில்களுமே புராதனக்கலை அம்சங்களுடன் அக்காலத்திய கட்டிடக்கலை மேன்மைக்கும் பாரம்பரியத்துக்கும் எடுத்துக்காட்டாய் காணப்படுகின்றன.கோமதேஸ்வரர் சிலையை ஒட்டியே இரண்டு கோயில்கள் உள்ளன்.
வேணூர் நகரத்தின் பின்னணியில் சஹயாத்திரி மலை உயர்ந்தோங்கி நிற்பதால் இந்த நகரம் ஒரு இயற்கை வசீகரத்துடன் மிளிர்கிறது. தர்மஸ்தலா மற்றும் கர்கலா போன்ற இதர முக்கிய ஜைன ஸ்தலங்களுக்கு அருகில் வேணூர் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தக்ஷிண கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் மங்களூர் நகரத்துடன் நல்ல சாலை வசதியால் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து உடுப்பிக்கும் மாநில அரசுப்பேருந்துகள் அல்லது டாக்ஸிகள் மூலம் செல்லலாம்.



Click it and Unblock the Notifications