மஹாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் இந்த யாவத்மால் ஆகும். விதர்பா பிரதேசத்தில் 1,460 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சந்திரபூர், பர்பானி, அகோலா மற்றும் அம்ராவதி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
யாவத்மால் என்ற பெயரானது மராத்தி மொழியில் ‘மலை’ என்ற பொருளைத்தரும் ‘யாவத்’ எனும் சொல்லையும், ‘வரிசை’ என்ற பொருளைத்தரும் ‘மால்’ என்ற சொல்லையும் சேர்த்து உருவாகியுள்ளது.
வரலாற்றுப்பின்னணி
யாவத்மால் நகரத்தின் வரலாற்றுப்பின்னணியை நோக்கும்போது இது பல புகழ்பெற்ற ராஜவம்சங்களால் ஆளப்பட்டிருப்பது புலனாகிறது. இவை எல்லாமே யாவத்மால் நகரத்தின் வளர்ச்சி, பாரம்பரியம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பிரத்யேகமான பங்களிப்புகளை அளித்து விட்டுச் சென்றிருக்கின்றன.
யாவத்மால் என்று அறியப்படுவதற்கு முன்னர் இந்த நகரம் யவடேச்சா மஹால் என்றும் யோத்-லோஹார் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் பீரார் பகுதியின் தக்காண சுல்தான் ஆளுகையின் கீழ் முக்கிய நகரமாக இது திகழ்ந்திருக்கிறது.
அஹமத்நகர் அரசர்களிடமிருந்து முகலாயரால் கைப்பற்றப்பட்ட இந்நகரம் கடைசி முகலாய மன்னருக்கு பிறகு மராத்தாக்கள் வசம் வந்துள்ளது. இறுதியில் ஆங்கிலேயர்கள் இப்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
சிட்டி ஆஃப் சென்ட்ரல் இந்தியா என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இது பின்னர் மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
யாவத்மால் குறித்த முக்கிய தகவல்கள்
யாவத்மால் நகரம் இங்குள்ள புராதனமான கோயில்கள் மற்றும் ரம்மியமான சிற்றுலாத்தலங்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. நரசிம்மர் கோயில், தத்தா மந்திர், கலம்ப், கடேஷ்வர் மஹாராஜ் கோயில் இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும்.
இவை தவிர, ஜகத் கோயில் மற்றும் கோஜோச்சி மசூதி போன்றவையும் யாவத்மால் நகரில் அமைந்துள்ளன.
யாவத்மால் அருகிலுள்ள கலாம்ப் எனும் சிறு கிராமத்தில் சிந்தாமணி கணேஷ் என்றழைக்கப்படும் ஒரு பிரசித்தமான நிலவறைக்கோயில் அமைந்துள்ளது. அதன் அருகாமையிலேயே கணேச குண்டம் எனும் புண்ணிய தீர்த்தமும் அமைந்துள்ளது.
பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம் மற்றும் திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு யாவத்மால் பகுதியில் இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களாக அமைந்துள்ளன.
குளிர்காலத்தில் விஜயம் செய்வதற்கு ஏற்ற சூழலுடன் காணப்படும் யாவத்மால் நகருக்கு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications