சினி எனப்படும் வண்ணமயமான ஓடுகள் பதிக்கப்பட்டிருப்பதால் இந்த இந்த கல்லறை மாளிகைக்கு சினி கா ரௌஜா எனும் பெயர் வந்துள்ளது. பேரரசர் ஷாஹஹானின் அவையில் ஒரு சிறந்த கல்விமானாகவும், அமைச்சராகவும், கவிஞராகவும் வீற்றிருந்த முல்லா சுக்ருல்லா ஷிராஜி என்பவரின் விருப்பப்படி இந்த கல்லறை மாளிகை எழுப்பப்பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் இத்மத் உத் தௌலா கல்லறையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்திருக்கிறது. 1635ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மாளிகை இந்தியாவில் முதல் முதலாக வண்ணக்கண்ணாடி ஓடுகள் பதித்து உருவாக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது.இந்தோ- பாரசீக கட்டிடக்கலை பாணிக்கான சிறந்த உதாரணமாகவும் இது கருதப்படுகிறது.
செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கல்லறை பெரும்பாலும் பழுப்புக்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் சுவர்கள் வண்ணமயமான ஓடுகள் பொதிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. இவற்றில் இஸ்லாமிய வாசகங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கல்லறை மாளிகையின் மையப்பகுதி எண்கோண வடிவில் கூரைப்பகுதியில் எட்டு உள் மாடங்கள் போன்ற அமைப்புகளை கொண்டு காட்சியளிக்கிறது.
மேலும், ஆப்கானிய பாணியில் வட்ட வடிவில் இங்குள்ள கல்லறை மேடை இஸ்லாமிய புனித வாசகங்களுடன் காணப்படுகிறது. தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இந்த சினி கா ரௌஜா கல்லறை மாளிகை முகலாய வரலாற்றுக்காலத்தின் சான்றாக வீற்றிருக்கிறது.