பேரரசர் அக்பரின் மகனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர்ஜஹானின் தந்தையான மிர்ஸா கியாஸ் பேக் அவர்களுக்கு இத்மத் உத் தௌலா எனும் சிறப்புப்பட்டத்தை அளித்து கௌரவித்தார்.
ஆனால் இந்த இத்மத் உத் தௌலா கல்லறை நூர் ஜஹானால் கட்டப்பட்டதாகும். தனது பெற்றோரான இத்மத் உத் தௌலா மற்றும் அவரது மனைவி அஸ்மத் ஜஹான் ஆகியோருக்காக அவர் இதனை எழுப்பியுள்ளார். 1622ம் ஆண்டிலிருந்து 1628ம் ஆண்டு வரை இதன் கட்டுமானம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த கல்லறை மாளிகையின் பிரம்மாண்டமும் கம்பீரமும் குறிப்பிடத்தக்கதாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், தாஜ்மஹால் உருவாவதற்கான ஒரு முன்மாதிரியாகவும் இது இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே இது குட்டி தாஜ் மஹால் அல்லது நகைப்பெட்டி என்ற சிறப்புப்பெயருடனும் அழைக்கப்படுகிறது.
23 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்லறை மாளிகை யமுனை நதியின் கிழக்குக்கரையில் என்.எச்-2 நெடுஞ்சாலையில் ராம் பாக் சர்க்கிள் எனும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
சிவப்புக்கற்களால் ஆன ஒரு பீட அமைப்பின் மீது சுற்றிலும் சார்பாக் எனப்படும் அழகிய பாரசிக பாணி பூங்கா சூழ்ந்திருக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிரது.
இந்த தோட்டப்பூங்காவின் நடுநடுவே குறுகிய நீர்ப்பாதைகள் மற்றும் நீர்த்தொட்டிகள், நீருற்றுகள் ஆகியவை நடைபாதைகளோடு சேர்த்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தோட்டத்தை நான்கு அங்கங்களாக பிரிப்பது போல் அமைந்திருப்பது ஒரு கூடுதல் வசீகரம்.