1411ம் ஆண்டில் அஹமதாபாத் நகரம் அஹமது ஷா மன்னரால் ஆக்கிரமிக்கப்பட்டபின் அவரது பேரனான மஹ்மூத் பெக்டா இந்த நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதனை ஒரு கோட்டை அமைப்பாக மாற்றினார்.
அந்த அமைப்பின்படி உருவாக்கப்பட்ட நகர கோட்டைச்சுவர் 10 கி.மீ சுற்றளவும், 12 நுழைவாயில்களையும், 189 கொத்தளங்களையும், 6000 ‘அலங்க’ அமைப்புகளையும் (ஆயுத துவாரங்கள்) கொண்டதாக விளங்கியது.
நகரத்தின் எல்லைகள் விரிந்து செல்ல செல்ல இந்த கோட்டைச்சுவர் அமைப்பு அழிந்துபோய் தற்போது சபர்மதி ஆற்றுக்கு அருகே உள்ள இடத்தில் மட்டுமே சிறிதளவு எஞ்சியுள்ளது.
ஆனால் அந்த 12 நுழைவாயில் அமைப்புகளும் காலத்தில் நீடித்து அழியாமல் நிற்கின்றன. ஷாபூர் கேட், டெல்லி கேட், தரியாபூர் கேட், பிரேம் கேட், கலுபூர் கேட்,பஞ்ச் குவா கேட், சரங்பூர் கேட், ராய்பூர் கேட், அஸ்டோடியா கேட், மஹுதா கேட், ஜமால்பூர் கேட், காஞ்சியா கேட், ராய்காட் கேட், கணேஷ் கேட் மற்றும் ராம் கேட் ஆகியவை இந்த நுழைவாயில்களின் பெயர்களாகும்.
இந்த நுழைவாயில் அமைப்புகளில் அழகிய சித்திர வடிப்புகள் மற்றும் வாசக பொறிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.
இந்த நுழைவாயில்கள் மற்றும் கோட்டைச்சுவர் அமைப்புக்கு உள்ளே அமைந்துள்ள நகர்ப்பகுதி பழைய நகரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நடந்து அல்லது இரு சக்கர வாகனங்கள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய குறுகலான தெருக்களை இந்த பழைய நகர்ப்பகுதி கொண்டுள்ளது.
‘போல்’ என்று அழைக்கப்படும் குடியிருப்புகள் இந்த பழைய நகரத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ஒரே சமூகத்தை சேர்ந்தோர் ஒன்று கூடி வாழ்கின்றனர். இந்த ‘போல்’ குடியிருப்புகளின் மையப்பகுதியில் ஒரு கோயில் தவறாது இடம் பெற்றுள்ளது.
இப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் யாவும் ரசிக்கக்கூடிய பழமையான அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன. சுவற்றில் பல்வேறு கடவுள் சித்திரங்கள், நிலைக்கதவு மற்றும் அருகால் அமைப்புகளில் மரக்குடைவு நுட்பங்கள், பலகணி மாடங்கள் மற்றும் அவற்றில் சல்லடை சாளர அமைப்புகள் என்று பலவகையான கண்கவர் கலையம்சங்களுடன் இங்குள்ள வீடுகள் வீற்றிருக்கின்றன.
இந்த ‘போல்’ குடியிருப்புப்பகுதிகளில் ‘சபுத்ரா’ எனும் பறவை மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மரங்கள் வெட்டப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்ட போது அப்பகுதியில் இருந்த பறவைகள் வசிப்பதற்கு வசதியாக இந்த கோபுரம் மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.