பத்ராச்சலம் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தும்முகுடேம் கிராமம், பாகற்காய் வடிவில் அமைந்திருக்கக்கூடிய சிறிய தீவுப் பகுதியாகும். இந்தக் கிராமத்தில்தான் கரா மற்றும் தூஷணன் என்ற இரண்டு அசுர சகோதரர்களின் படைகளை சேர்ந்த 14000 அரக்கர்களை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வதம் செய்ததாக புராணம் கூறுகிறது.
இதன் பிறகு கொல்லப்பட்ட அரக்கர்களின் சாம்பலின் மீதுதான் தும்முகுடேம் கிராமம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தும்முகுடேம் என்ற வார்த்தையில் உள்ள 'தும்மு' எனும் சொல்லுக்கு தெலுங்கில் சாம்பல் என்று பொருள்.
தும்முகுடேம் தீவில் வசிக்கக்கூடிய மக்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை ஆத்மராமர் என்ற வடிவில் வழிபட்டு வருகின்றனர். இந்தத் தீவை அருகாமை பகுதிகளோடு இணைக்கும் உருதி வாய்ந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இது ஆர்த்தர் காட்டன் என்ற ஆங்கில கட்டிடக் கலை நிபுணரால் போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்டது ஆகும்.