செக்டார் 1ல் இடம்பெற்றுள்ள இந்த கேபிடோல் காம்ப்ளக்ஸ் ஒரு பிரம்மாண்டமான வளாகமாகும். இதன் உள்ளே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஆட்சிப்பீடங்கள் இயங்குகின்றன.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக இந்த வளாகம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இப்படி ஒரு ஒருங்கிணைந்த வளாக அமைப்பிற்கான பெருமை முழுதும் சண்டிகர் நகரத்தை வடிவமைத்த லெ கொர்புசியர் அவர்களையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமைச்செயலகம், சட்டப்பேரவை மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று முக்கியமான அரசாங்க அமைப்புகள் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த மூன்று அமைப்புகளுக்குள் நுழைந்து பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால், கைச்சின்னம் அமைந்துள்ள இடத்திலிருந்து இந்த அரசாங்க மாளிகை வளாகங்களை பார்த்து ரசிக்கலாம்.
உள் நுழைந்து பார்க்க வேண்டுமெனில் சுற்றுலா அலுவலகம் அல்லது உரிய அதிகாரிகளிடம் விசேட அனுமதி பெற்று செல்லலாம். 9 வது செக்டாரில் உள்ள டூரிஸ்ட் பீரோ அல்லது 17 வது செக்டாரில் உள்ள டூரிஸ்ட் சென்டர் போன்ற இடங்களில் இதற்கான விதிமுறைகளுக்கேற்ப அனுமதி பெறலாம்.