பிரம்மகிரி காட்டுயிர் சரணாலயம் தெற்குப்பகுதியில் கேரளாவின் வயநாடு பகுதிக்கும் வடக்குப்பகுதியில் கர்நாடகாவின் குடகு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் உயர்ந்த சிகரமாக பிரம்மகிரி மலை உள்ளது.
கூர்க்கிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இது சுமார் 181 கி.மீ தூரத்துக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இதிலுள்ள வனப்பகுதி அடர்ந்ததாகவும் பசுமைமாறா மரங்களை கொண்டதாகவும் காணப்படுகிறது. மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக விளங்குகிறது.
பிரம்மகிரி மலையை கேரளா அல்லது கர்நாடகம் என்ற இரண்டு புறங்களிலிருந்தும் அடையலாம். எந்த பக்கமிருந்து ஏறினாலும் மலையேற்றம் செய்கின்றவர்கள் அந்தந்த பகுதிக்குரிய மாநில அரசின் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மகிரி காட்டுயிர் சரணாலயத்தில் சிங்கவால் குரங்கு, யானை, காட்டெருமை, புலி, காட்டுப்பூனை, சிறுத்தைப்பூனை, காட்டு நாய், கரடி, காட்டுப்பன்றி, சாம்பார் மான், புள்ளி மான், நீலகிரி கருங்குரங்கு, குரைக்கும் மான், எலி மான், மலபார் ராட்சத அணில், பறக்கும் ராட்சத அணில், அரிய வகை இனமான நீலகிரி மரநாய், நீர் நாய், பழுப்பு கீரி, மரப்பூனை, முள்ளம்பன்றி, எறும்புத்தின்னி, மலைப்பாம்பு, நாகப்பாம்பு, ராஜ நாகம், பச்சைப்புறா அல்லது மரகதப்புறா, கறுப்பு புல்புல் மற்றும் மலபார் ட்ரோகன் குருவி போன்ற பலவகைப்பட்ட காட்டுயிர்கள் வாழ்கின்றன.