தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது.
காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது.புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் நன்மை என்பது ஐதீகமாகும்.
இந்த குளத்தையொட்டி அகஸ்தீஸ்வர பகவானுக்கான கோயில் ஒன்றும் உள்ளது. புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் இந்த காவேரியை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.
தலைக்காவிரி தீர்த்தவாரியில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது பக்தர்கள் மத்தியில் பரவலான நம்பிக்கையாக உள்ளது.
தலைக்காவிரி பகுதியில் பாகமண்டலா என்ற மற்றொரு இடமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். காவேரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் ஒன்று சேரும் இடம் இந்த பாகமண்டலமாகும். தலைக்காவிரியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இது அமைந்துள்ளது.இந்த ஸ்தலத்துக்கு அருகில் கணபதிக்கடவுள், சுப்ரமணியசுவாமி மற்றும் விஷ்ணுவுக்கான கோயில்கள் உள்ளன.
வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தீர்த்தவாரியிலிருந்து நீர் (காவேரி) ஊற்றாக வெளிப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களும் இதை தரிசிப்பதற்கு இங்கு கூடுகின்றனர். இந்நிகழ்வு ஒரு திருவிழாவாக இந்த ஸ்தலத்தில் கொண்டாடப்படுவதோடு ஆயிரக்கணக்கான விளக்குகள் அச்சமயம் இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படுகின்றன.