பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இந்த இருப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆறு இதிலிருந்து உருவாவதால் இதற்கு லட்சுமண தீர்த்த நீர் வீழ்ச்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இருப்பு என்று அழைக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சி அறுபது அடி உயரத்தில் பசுமையான மலைப்பகுதியின் மத்தியில் விழுகிறது. இருப்பு நீர்வீழ்ச்சி நாகர்கோல் நெடுஞ்சாலையில் விராஜ் பேட்டையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் மடிக்கேரியிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு வெகு அருகில் உள்ளது என்பதும் குறிப்பிட த்தக்கது.
புகழ் பெற்ற ராமேஸ்வரர் கோயில் இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது. புராணக் கதைகளின்படி ராமனும் லட்சுமணனும் சீதையை தேடி இந்த காட்டுக்குள் சென்றதாகவும் அப்போது ராமன் தாகம் எடுக்கிறதென்று கூறவே லட்சுமணன் தன் அம்பை பிரம்மகிரி மலையை நோக்கி எய்தபோது இந்த லட்சுமண தீர்த்தம் நீர் வீழ்ச்சியாய் ஊற்றி ராமனின் தாகத்தை தீர்த்த தாய் சொல்லப்படுகிறது.
இந்த புராணக்கதை அடிப்படையில் இந்த நீர்வீழ்ச்சியில் மஹா சிவராத்திரியின் போது குளித்தால் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் தொலந்து போகும் என்ற ஐதீகம் நிலவுகிறது.
எல்லா நீர்வீழ்ச்சிகளையும் போலவே இங்கும் மழைக்காலத்தில் மட்டுமே வேகமும் நீரின் வரத்தும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. நீர் வீழ்ச்சியை ஒட்டியவாறே மலையின் மீது ஏறுவதற்கு வசதியாக ஒரு பாலமும் படிகளும் உள்ளதால் மேலிருந்து விழும் நீரை மிக அருகில் பார்க்க முடிவதோடு அங்குள்ள எழில் வாய்ந்த மரங்களையும் இயற்கை சூழலையும் மிக சௌகரியமாக பார்த்து ரசிக்க முடியும்.
அருவியின் இரைச்சலோடு கலந்து மிளிரும் இந்த இயற்கை அழகை தரிசிப்பதே ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.