டெல்லியில் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ‘சுன்னாமல் ஹவேலி’ பிரசித்தி பெற்றுள்ளது. பரந்த உள் கூடங்கள், பெல்ஜியம் கண்ணாடிகள் மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் இந்த ஹவேலி மாளிகையில் காணப்படுகின்றன.
டெல்லி மாநகரத்தின் மையப்பகுதியான சாந்தினி சௌக் பகுதியில் அமைந்துள்ள இந்த சுன்னாமல் ஹவேலியை சுன்னாமல் வம்சாவளியை சேர்ந்த அனில் பெர்ஷாத் என்பவர் அதன் பழைய மெருகு கெடாமல் புதுப்பித்துள்ளார்.
1857ம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு புரட்சிக்கு பிறகு டெல்லி நகரத்தின் மிகப்பெரிய தனவந்தராக சுன்னாமல் எனும் வணிகர் வளர்ச்சியடைந்தபோது இந்த ஹவேலி உருவாக்கப்பட்டு, தற்போதைய சாந்தினி சௌக் பகுதியில் இருந்த கத்ரா நீல் எனும் ஸ்தலத்தின் முக்கியமான மாளிகையாக திகழ்ந்துள்ளது.
ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் மூன்று அடுக்குகளை கொண்டதாக இந்த பெரிய ஹவேலி மாளிகை கட்டப்பட்டுள்ளது. 128 அறைகளைக்கொண்ட இம்மாளிகையில் சுன்னாமல் குடும்பத்தார் இன்றும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹவேலியின் உச்சியிலிருந்து சாந்தினி சௌக் பகுதி முழுவதையும் பார்த்து ரசிக்க முடியும். சுவர்களால் சூழப்பட்ட பழைய டெல்லி நகரில் சிதையாமல் இன்றும் காட்சியளிக்கும் ஒரே ஹவேலி இந்த சுன்னாமல் ஹவேலி என்பதும் ஒரு விசேஷமான தகவலாகும்.
இந்த மாளிகையின் வரவேற்பறை சுவரில் காணப்படும் கல்வெட்டுக்குறிப்பு ஒன்று இம்மாளிகை 1848ம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிவிக்கிறது. இருப்பினும் 1864ம் ஆண்டிலும் இந்த ஹவேலியில் கூடுதல் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சுன்னாமல் ஹவேலிக்கு அருகிலேயே ஹவுஜ் காஸ் புராதன வளாகம், மெஹராலி ஆர்க்கியாலஜிகல் பார்க் மற்றும் சாகேத் மால் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்திருக்கின்றன.