உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகளில் ஒன்றான இந்தியாவில், சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற மக்களவைகள் செயல்படும் அதி உச்ச இறையாண்மையின் பீடம் தான் இந்த பாராளுமன்ற மாளிகை அல்லது ‘பார்லிமெண்ட் ஹவுஸ்’ என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
டெல்லியில் சன்சத் மார்க் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்த பாராளுமன்ற மாளிகையானது அற்புதமான தோற்றத்துடன் வட்ட வடிவில் கம்பீரமாக அமைந்துள்ளது.
இந்த மாளிகையில் அமைச்சக அலுவலகங்கள், நிர்வாகக்குழு அறைகள் மற்றும் முக்கியமான புத்தகங்களின் சேகரிப்புகளைக்கொண்ட நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த வட்ட வடிவ கட்டமைப்பின் மையத்தில் ஒரு பெரிய கூடம் உச்சியில் குமிழ் மாடக்கூரையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆங்கிலேய கலையம்சங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இம்மாளிகையின் வெளி நடைக்கூடத்தில் 144 தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் என்ற இரு ஆங்கிலேய கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு 1927ம் ஆண்டில் இந்த பாராளுமன்ற மாளிகை கட்டப்பட்டிருக்கிறது.
1946ம் ஆண்டு வரை காலனிய ஆட்சியில் மத்திய சட்டமியற்றும் குழுவுக்கான பிரத்யேக மத்திய நூலகமாக இந்த மாளிகை பயன்பட்டு வந்திருக்கிறது. பின்னர் இது அவைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இம்மாளிகையின் மையக்கூடம் இரண்டு காரணங்களுக்காக இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. 1947ம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து விடுபட்டு நேருவின் தலைமையிலான தற்காலிக சுதந்திர அரசாக மாற்றம் பெற்றது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்டது ஆகிய இரண்டு முக்கிய வரலாற்று சம்பவங்கள் இந்த மையக்கூடத்தில்தான் அரங்கேறியுள்ளன.
தற்போது இந்த மையக்கூடமானது லோக் சபா எனப்படும் மக்கள் அவை மற்றும் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்கள் அவை ஆகிய இரண்டு சபைகள் கூடி விவாதிக்கும் உச்ச பீடமாகவும், நாடாளுமன்ற அங்கத்தினர்கள் இதர விஷயங்கள் குறித்து ஆலோசிக்கும் மையமாகவும் திகழ்கிறது.
பார்வையாளர்கள் பாராளுமன்ற மாளிகைக்குள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும் முறைப்படி முன்அனுமதி பெற்று பாராளுமன்ற மாளிகைக்கு உள்ளே சென்று அவை நடவடிக்கைகளை பார்க்க சட்டப்படி குடிமக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்கான பிரத்யேக நடைமுறைகளை விசாரித்து தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டும்.