800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கௌரி ஷங்கர் கோயில் சாந்தினி சௌக் பகுதியில் திகம்பர் ஜெயின் லால் கோயிலுக்கு வெகு அருகிலேயே உள்ளது. இந்திய சைவத்திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்றாக இந்த கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கோயிலுள்ள சிவலிங்கத்தை சுற்றி வெள்ளியான பாம்புகள் காட்சியளிக்கின்றன. காஸ்மிக் பில்லர் அல்லது ஆகாசத்தூண் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு அண்டவெளியின் மையப்புள்ளியாக கருதப்படுகிறது. அப்பா கங்காதர் எனும் மராட்டிய தளபதியால் இந்த கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விளங்கி வரும் கதைகளின்படி, போரில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இந்த தளபதி தான் பிழைத்தால் ஒரு கோயிலைக்கட்டுவதாக சிவனிடம் வேண்டியுள்ளார். அவ்வண்ணமே அவர் பிழைத்தெழுந்து தன் வாக்குப்படி இந்த கோயிலை கட்டியுள்ளார் என்பது தலபுராணமாகும். இந்த சிவன் கோயில் 1761ம் ஆண்டு சாந்தினி சௌக் பகுதியில் எழுப்பப்பட்டிருக்கிறது.
கோயிலின் ஸ்தாபகரான அப்பா கங்காதர் பெயரானது பிரமிடு வடிவில் எழுப்பப்பட்டுள்ள கோபுரக்கூரையின் அடிப்பகுதியில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சேத் ஜெய்புரா என்பவரால் 1859ம் ஆண்டில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதாகவும் கோயில் ஜன்னல்களில் காணப்படும் குறிப்புகளை ஆதாரமாக வைத்து சொல்லப்படுகின்றன.
கோயிலின் உட்பகுதியில் சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகள் மற்றும் அவர்களது குமாரர்களான கணேஷ் மற்றும் கார்த்திக் சிலைகள் ஆகியன காணப்படுகின்றன.
அபரிமிதமான ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிவ-பார்வதி சிலைகள் லிங்கத்தின் பின்னால் காட்சியளிக்கின்றன. லிங்கத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வெள்ளிக்கலசத்திலிருந்து தொடர்ந்து நீர் லிங்கத்தின்மீது வழிந்துகொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்கிறது.
சாந்தினி சௌக் பகுதியில் உள்ள இந்த கௌரி ஷங்கர் கோயிலுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.