கூனி தர்வாசா என்றழைக்கப்படும் இந்த நுழைவாயில் அமைப்பின் பெயருக்கு ‘குருதி தோய்ந்த வாசல்’ என்பது பொருளாகும். பெயருக்கேற்றபடி பல சுவாரசியமான கதைகள் இந்த நுழைவாயிலின் பின்னணியில் சொல்லப்படுகின்றன. இந்த கூனி தர்வாஜா நுழைவாயில் டெல்லி கேட்’டுக்கு அருகில் பஹதூர் ஷா மார்க் எனும் இடத்தில் உள்ளது.
இஸ்லாமிய சுர் வம்சத்தை தோற்றுவித்தவரான ஷெர் ஷா சூரி எனும் மன்னரால் இந்த நுழைவாயில் கட்டுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மன்னர் நிர்மாணித்த ஃபெரோஸாபாத் எனும் நகருக்கான வாயில் அமைப்பாக இந்த கூனி தர்வாசா கட்டப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த வாசல் வழியாக விஜயம் செய்த காரணத்தால் இது காபூலி பஜார் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி பகுதியில் காணப்படும் குவார்சைட் பாறைக்கற்களால் இந்த நுழைவாயில் அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. அடுக்குகள் கொண்ட இந்த கட்டுமானத்தின் மேலே ஏற படிக்கட்டுகள் உள்ளன.
மூன்று முகலாய இளவரசர்கள் இந்த நுழைவாயில் ஸ்தலத்தில் மரணமடைந்ததால் இதற்கு குருதி தோய்ந்த வாசல் என்ற பெயர் இடப்பட்டதாக சொல்லப்படுகிறது. பஹதூர் ஷா ஜாஃபர் மன்னரின் புதல்வர்களான மிர்ஸா முகல் மற்றும் கிஜிர் சுல்தான் ஆகியோரோடு பேரனான மிர்ஸா அபு பக்கரும் இந்த இடத்தில் ஆங்கிலேய தளபதியான வில்லியம் ஹட்சன் என்பவரால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
1857ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பஹதூர் ஷா மன்னர் ஆங்கிலேயப் படைகளிடம் சரணடைந்தபோது இந்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் இந்த நுழைவாயிலின் பெயர்க்காரணத்துக்கு வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன.
அவற்றில் சில:
ஔரங்கசீப் தனக்கு போட்டியாக அரியணை வாரிசாக இருந்த தனது மூத்த சகோதர இளவரசர் தார ஷிக்கா’வை கொன்று அவரது தலையை இந்த நுழைவாயிலில் ஔரங்கசீப் மன்னர் தொங்கவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
1739ம் ஆண்டில் பாரசீக மன்னர் நாதிர்ஷா டெல்லியை சூறையாடியபோது இந்த நுழைவாயில் பகுதியில் ரத்த ஆறு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய சுதந்திரமடைந்த பின்னரும் 1947ம் ஆண்டில் நடைபெற்ற பிரிவினை கலவரத்தின்போது இந்த கூனி தர்வாஜா ஸ்தலத்தில் ரத்தக்களறி நிகழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. புராணக்குய்லா முகாமை நோக்கி பல அகதிகள் ஓடியபோது இந்த ஸ்தலத்தில் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கதைகள் ஒருபுறம் இருக்க, தற்போது இந்த கூனி தர்வாஜா நுழைவாயில் கட்டமைப்பானது இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பிலுள்ள புராதனச்சின்னமாக வீற்றுள்ளது. இருப்பினும் 2002ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பின்னர் இதன் உள்ளே பார்வையாளர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.