குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் எனப்படும் இந்த சீக்கிய குருத்வாரா கோயில் சிர்ஹிந்த்-மொரிண்டா சாலையில் அமைந்துள்ளது. 1704ம் ஆண்டில் குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்களான ஷாஹிப்ஸதா ஃபதேஹ் சிங் மற்றும் ஷாஹிப்ஸதா ஸொரோவர் சிங் ஆகியோரை மதம் மாற மறுத்த காரணத்துக்காக வாசிர்கான் எனும் ‘சிர்ஹிந்த் ஃபௌஜ்தார்’ இந்த இடத்தில் செங்கல் சூளையில் வைத்து உயிருடன் எரித்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அவர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த குருத்வாரா நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த குருத்வாரா வளாகத்தின் உள்பகுதியில் குருத்வாரா போரா சாஹிப், குருத்வாரா புர்ஜ் மாதா குஜ்ரி, குருத்வாரா ஷாஹித் கஞ்ச், தொடர்மால் ஜைன் ஹால் மற்றும் சரோவர் எனும் தீர்த்தக்குளம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
இதன் வாசல் அமைப்பு வெண் கற்களால் அமைக்கப்பட்டதாகவும் நடைபாதைகள் சலைவைக்கல்லால் ஆனவையாகவும் காட்சியளிக்கின்றன. குருத்வாராவின் பிரதான கட்டமைப்பானது தங்க கலச கோபுர அமைப்புகள் மற்றும் சீக்கிய பாணியிலான சலவைக்கல் அலங்கார நுட்பங்களை கொண்டுள்ளது.
உயிர்நீத்த அந்த இரண்டு சீக்கிய வாரிசுகளின் நினைவாக ஷாஹீதி ஜோர் மேளா எனும் திருவிழாவும் இந்த குருத்வாராவில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அமைதியான சூழலும் வரலாற்று மணமும் கவிழ்ந்திருக்கும் இந்த குருத்வாரா ஸ்தலம் சுற்றுலாப்பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சமாகும்.



Click it and Unblock the Notifications