மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அமைவிடம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பார்வையிடங்கள் என்ற அனைத்து சிறப்புகளும் நிறைந்த இந்தூர், மத்தியப் பிரதேசத்தின் இதயம் என்று மிகவும் பொருத்தமான பெயரைப் பெற்றுள்ள இடமாகும். இந்தூருக்கு சுற்றுலா வருபவர்கள் சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் நதிகள், அமைதியான ஏரிகள் மற்றும் உயர்ந்து கிடக்கும் பீடபூமிகள் ஆகியவற்றின் திணறடிக்கும் காட்சிகளை காண முடியும்.
இயற்கையின் உளி கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டும், வரிசையாக சிறந்த கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்தூர் ஒளி பொருந்திய பழமையை பாதுகாத்து வைத்திருக்கும் நகரமாகும்.
கான் மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடமாகவும் இந்தூர் உள்ளது. பழமை மற்றும் புதுமையின் கலவையான இயற்கை அதிகசயங்களை சமமாக காட்டும் இடமாக இந்நகரம் உள்ளது.
இவ்வாறு வடிவமைப்பிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இணைந்திருக்கும் இந்தூர், சுற்றுலாவிற்கு மிகவும் சிறந்த இடமாகும்.
வரலாற்றின் பாதையில் இந்தூர்
மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாக இருக்கும் இந்தூரில் அதன் பழமை அழகுற பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த்ரேஸ்வர் கோவிலும் உள்ளது.
ராவ் நந்தலால் சௌத்ரி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம், பல்வேறு பெரிய சாம்ராஜ்யங்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்த காலங்களைக் கடந்து இன்றும் செழிப்புற நிமிர்ந்து நிற்கிறது. எனினும், வரலாற்றின் ஏடுகளில் இந்தூருக்கு தனியான இடத்தை உருவாக்கிக் கொடுத்ததில் ஹோல்கார் வம்சத்திற்கு மிகப்பெரும் பங்கு உள்ளது.
இந்தூரைச் சுற்றியுள்ள மனதை விட்டு நீங்கா சுற்றுலா தலங்கள்
கலைநயமிக்க அரண்மனைகள், அற்புதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் அழகான மதத்தலங்கள் ஆகியவற்றின் கலவையாகவே இந்தூர் விளங்குகிறது. இதன் காரணமாகவே இந்தியாவிலேயே அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இந்தூர் விளங்குகிறது.
நீங்கள் இந்தூருக்கு சுற்றுலா வரும் வேளையில் ராஜ்வாடா என்ற அற்புதமான அரண்மனை; இந்தூரின் அழகை காட்டும் பிஜசென் டெக்ரி வியூ பாயிண்ட்;
ஹோல்கார் அரசர்களின் சிறந்த இரசனை மற்றும் நினைவுகளை பதிவாக்கி வைத்திருக்கும் லால்பாக் அரண்மனை; இயற்கை அதிசயமாக விழுந்து கொண்டிருக்கும் பாதாள் பானி நீர்வீழ்ச்சி; மேக்தூத் என்ற இணையில்லாத அழகை கொண்டுள்ள தோட்டம்;
இந்தூரின் முதன்மையான அடையாளமாக இருக்கும் காந்தி ஹால்; மற்றும் எல்லா மதத்தினரும் வந்து தங்களுடைய பிரார்த்தனைகளை செய்து செல்லும் கீதா பவன்; இந்தூரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார சின்னங்களை கொண்டிருக்கும் இந்தூர் அருங்காட்சியகம் மற்றும் பல அறிவார்ந்த சுற்றுலா அமைவிடங்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவே இந்தூரில் அமைந்துள்ளன.
பழமை மற்றும் புதுமையின் இசை முழக்கம் இந்தூர்
அழகிய நினைவுச்சின்னங்கள் மற்றும் அடையாளங்களால் வடிவம் பெற்றிருக்கும் நகரமாக இந்தூர் விளங்குகிறது. 200 ஆண்டுகள் பழமையான அரண்மனையான ராஜ்வாடா போன்ற சின்னங்கள், நவீன கட்டிடக்கலை தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் வகையில் நிமிர்ந்து நிற்கும் இடமாக இந்தூர் உள்ளது.
பிரெஞ்சு, முகலாய மற்றும் மராத்திய கட்டிடக்கலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள அழகிய நினைவுச்சின்னங்கள் இங்கு வரும் பார்வையாளர்களை மயங்கச் செய்யும் அம்சங்களாகும்.
மாறாமலிருக்கும் பழமை மட்டுமல்லாமல், இந்த நகரத்தின் வரலாற்றை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திடமான முயற்சிகளும் இந்தூரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் கவர்ந்து இழுக்கப்படுவதற்கான காரணமாக உள்ளது.
இந்தூரும் கலைநயமும்
இந்தூர் நகரம் அதன் துடிப்பான மற்றும் வண்ணமயமான கலை மற்றும் கைவினைப்பொருட்களுக்காக மிகவும் புகழ் பெற்றுள்ள நகரமாகும். பாரம்பரிய தொழில்நுட்பங்கள், நீடித்து உழைக்கும் வேலைத்திறன் மற்றும் பரம்பரையாக வரும் அடையாளம் ஆகியவற்றை அறிவார்ந்த தன்மையுடன் இந்தூர் கொண்டிருக்கிறது.
கைகளால் செய்யப்படும் அச்சு வேலைகள், டை மற்றும் சாயம் அல்லது பந்தேஜ், பாடிக், சணல் தொழில்கள் மற்றும் ஸாரி வேலைகள் ஆகியவை இந்தூரின் பாரம்பரியமிக்க கைவினைத் தொழில்களாகும்.
இந்தூருக்கு பயணிக்கும் போது...
இந்தூரில் தரமான பட்ஜெட் விடுதிகள் மற்றும் வசதியான விடுதிகள் என அனைத்து தரப்பினருக்குமான விடுதிகள் உள்ளதால் இது மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.
அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ள சில விடுதிகள் மற்றும் ஓய்வு இல்லங்கள் ஆகியவை அற்புதமான தரத்துடன் இந்தூரில் அமைந்துள்ளன. மேலும், இந்தூர் நகரம் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்தூருக்கு சுற்றுலா வர மிகவும் சிறந்த பருவம்
இயற்கையன்னை தன்னுடைய மகிழ்ச்சியான கரங்களை குளிர்காலத்தில் நீட்டி அழைக்கும் போது, இந்தூருக்கு வருபவர்களுக்கு மிகச்சிறந்த சுற்றுலா அனுவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.