ஹிமாச்சல பிரதேஷ மாநிலத்தில் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்த நதௌன் நகரம் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் உயரத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் அற்புதமான இயற்கைக்காட்சிகளை பயணிகளுக்கு வழங்குகிறது. வரலாற்றுக்குறிப்புகளின்படி நதௌன் ஜாகிர் எனும் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இது திகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோடைக்காலத்தில் காங்க்ரா மன்னர் மஹாராஜா சன்சார் சந்த் அவர்களின் ஓய்வு ஸ்தலமாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நகரம் பல விசேஷமான சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்ரீ குருத்வாரா சாஹீப், பில் காளேஷ்வர் கோயில் மற்றும் அம்தர் நதௌன் கோட்டை ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.
சீக்கிய இனத்தாரின் புனிதத்தலமான குருத்வாரா சாஹீப் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ளது. பில் காளேஷ்வர் கோயிலும் நதௌன் ஸ்தலத்தில் பயணிகள் தவறாமல் விஜயம் செய்யவேண்டிய திருத்தலமாகும். நாட்டுப்புற நம்பிக்கைகளின்படி இக்கோயில் மஹாபாரத பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமானுக்கான இக்கோயில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான யாத்ரீக பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.
அம்தர் நதௌன் கோட்டை பயணிகளால் அதிகம் விரும்பப்படும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இங்கு கடோச் வம்சத்தைச்சேர்ந்த மஹாராஜா சன்சார் சந்த் அவர்களின் ராஜ பாரம்பரிய உன்னதங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை காணலாம்.
இது தவிர பீர் சாஹீப் கல்லறையும் நதௌன் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். மீன் பிடிப்பு மற்றும் பியாஸ் ஆற்றில் மிதவைப்படகுச்சவாரி போன்றவற்றிலும் பயணிகள் ஈடுபடலாம்.
நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக பயணிகள் எளிதில் சென்றடையலாம். கக்கல் விமான நிலையம் மற்றும் ஜ்வாலாமுகி ரோட் ரயில்வே ஸ்டேஷன் போன்றவை இந்த நகரத்திற்கு அருகில் உள்ளன.
மே மாதத்தில் துவங்கி ஜுலை வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வது நல்லது. இனிமையான சூழல் நிலவுவதால் குளிர்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications