ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய 'மண் அணை' என்ற புகழை பெற்றது பவானிசாகர் அணை. தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சுமார் 9 கி.மீட்டர் நீளமும், 120 அடி உயரமும் கொண்ட இந்த அணையில் 36 டி.எம்.சி., அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம்.
ஹலோ ஹலோ கொஞ்சம் நிறுத்துங்க... நாங்க என்ன தேர்வுக்கா போறோம். அணை பற்றிய ஹிஸ்டரி எல்லாம் சொல்லி தர்றீங்க...! விஷயத்து வாங்கனு நீங்க கேட்பது தெரிகிறது. விஷயத்துக்கு தான் வருகிறேன். அதற்குள் நீங்க கோவப்பட்டா நான் என்ன பண்ண.
கேரளா, தமிழக மலைத் தொடரில், நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பவானி ஆறு, மோயாறு ஆகிய இரண்டு ஆறுகள் வாயிலாக, பவானி சாகருக்கு நீர்வரத்தை கொண்டிருக்கிறது.
இந்த கோடைக்கு அங்கே நீங்க போக திட்டமிட்டீங்கனா...! மறக்காம அணையின் முன்புறம் பல ஏக்கர் பரப்பளவில், பெரியவர்கள், குழந்தைகள் மட்டுமின்றி காதலர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய பூங்கா ஒரு வரப்பிரசாதம்.

அந்த அழகியலை பார்த்துவிட்டு, அங்கிருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள கீழ் பவானி ஆறு பகுதிக்கு போனா... தண்ணீரா இல்ல கண்ணாடியானு நீங்க கேட்கும் அளவுக்கு அந்த ஆற்றில் உள்ள தண்ணீர் தெளிவாகவும், கீழே கிடக்கும் அனைத்தும் நம்மால் பார்க்க முடியும்.
அது மட்டுமில்லை. கீழ் பவானி ஆறு பகுதிக்கு சென்றதும், ஆற்றின் கரையில் உங்க கால்களை வைத்தால் போதும், செலவு இல்லாமல் மீன் மசாஜ் கிடைக்கும்.
மலைகள், காடுகள், ஆறுகள் இவற்றை எல்லாம் விட்டு, வேலைக்காக சென்னைக்கு போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், அங்கிருக்கும் மால்களில் 100 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து, சின்னதா ரிலாக்ஸ் பண்ண மீன் மசாஜ் எல்லாம் பண்ணுவதை நாம பார்த்து இருப்போம்...!
அந்த மசாஜை, நீங்க ஒரு பைசா கூட இல்லாமல் இந்த கோடைக்கு நாங்க சொல்கிற இடத்துக்கு போன நிச்சயம் கிடைக்கும். கோடை காலம் என்பதால் தண்ணீரும் அதிகளவில் இருக்காது. பயமின்றி உங்கள் கால்களை வைத்தால் உங்களை அங்குள்ள மீன்கள் சொர்க்கத்தின் வாசல் வரை இட்டுச்செல்லும் என்பதை நிச்சயமாக சொல்வோம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வாசல் தாண்டி உள்ளேயும் போவீங்க...
எப்படி செல்வது
ஈரோட்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவிலும், கோவை மாவட்டத்தில் இருந்து 71 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது பவானி சாகர் அணை. சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.

ஈரோட்டில் இருந்து வருபவர்கள் கோபி, சத்தியமங்கலம் வழியாக இப்பகுதியை அடையலாம். கோவையில் இருந்து அன்னூர், புளியம்பட்டி வழியாக பண்ணாரி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம்.
நீங்கள் இந்த பகுதியை வனப்பகுதி ஊடே கடந்து செல்ல வேண்டும் என்பதால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் யானை, கரடி, புலி என காட்டுயிர்களை பார்க்கலாம். அப்படி யானை போன்ற காட்டுயிர்களை பார்த்தால், தயவு செய்து தொந்தரவு செய்யாதீங்க... இயற்கை, அது சார்ந்த உயிர்களுடன் ஒன்றிணைந்தால், உங்களுக்கு எவ்வித தொந்தரவும், தீங்கும் நேராது என்பதை முதலில் உணருங்கள்.
அமைதியாக, அவை கடந்து செல்லும் வரை, வாகனம், குரல் ஒலியை ஏற்படுத்தாமல் உங்கள் கைப்பேசியில் சத்தமின்றி பதிவு செய்து விட்டு செல்லுங்கள். கீழ் பவானி ஆறு மட்டுமின்றி, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அரசு அருங்காட்சியகம், கரடியூர் காட்சி முனை, பண்ணாரி ஆகிய பகுதிகள் அங்கிருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைந்துள்ளது.
ஈரோட்டுக்கு சுற்றுலா செல்ல தகுந்த காலம் கோடை காலம் என்பதில் மறக்காதீங்க. இங்குள்ள நீர்த்தேக்கத்தில் உடல் சோர்வைப் போக்கும் ஆயில் மசாஜுடன் குளித்து மகிழலாம் என்பதும் கூடுதல் செய்தி...!
கோடை தவிர்த்து மற்ற நேரங்களில் போனால், அதிகளவு தண்ணீர் ஓடும் என்பதால், குளிக்கவும், மீன் மசாஜ் பெறுவதும் சற்று கடினம் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.



Click it and Unblock the Notifications





