நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு குட்டீஸ்கள் எங்காவது அழைத்துப் போகச் சொல்லி கொண்டே இருக்கிறார்களா? அவர்கள் மனம் கவர்ந்த படியும் இருக்கும், உங்களின் பணம் கரையாமலும் இருக்கும் - நீங்கள் இங்கு சென்றால். ஆம்! சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி 2023, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 4 அன்று கோலாகலமாக துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பல வேடிக்கைகள், கேளிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் வித விதமான உணவுகள் ஆகியவை இந்த பொருட்காட்சியின் அம்சங்களாகும். கம்மி பட்ஜெட்டில் அட்டகாசமாக மாலைப் பொழுதை கழிக்க இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் போது இதை மிஸ் பண்ணலாமா?

47 வது சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி
சென்னை தீவுத்திடலில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4 அன்று வெகு விமர்சியாக தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே தினமும் ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இத்தனை நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதா, நமக்கு தான் நேரம் இருக்கிறதே. ஒன்றும் தவறில்லை. இன்னமும் செல்லலாம். ஏனெனில் இந்த பொருட்காட்சி மார்ச் 10 அன்று தான் நிறைவு பெறுகிறது.

சுவாரஸ்யமான பல்வேறு ஸ்டால்கள்
1. மெட்ரோ ஸ்டாலுக்குள் அடுத்த ஐந்து வருடத்தில் சென்னை மெட்ரோ எப்படி மாறப் போகிறது, அதன் முழு திட்டங்கள் மற்றும் மினி ரயில்களைக் காணலாம்.
2. டிராபிக் போலீஸ், பொது காவல் துறை, அவர்களின் பதவிகள், உபயோகப்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகள் ஆகியவை காவல்துறை ஸ்டாலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
3. தமிழ்நாட்டின் பிரபலக் கோயில்களின் மினி கட்டமைப்புகள், கோபுரங்கள்,அழகிய பல்வேறு சுவாமி சிலைகள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை ஸ்டாலில் நீங்கள் பார்க்கலாம்.
4. மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, ஆவின், காதி, சுற்றுலா, கல்வி போன்ற பல்வேறு அரசுத் துறைகளின் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன.

பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன.
1. இந்தியாவில் அதிக அளவில் பார்க்கப்படும் முதன்மை சுற்றுலாதலமாகத் திகழும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரயில், தாராசுரம் கோயில் ஆகியவை படமாக்கப்பட்டு, விர்சுவல் ரியாலிட்டி மூலம் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுகிறது.
2. லண்டன் பிரிட்ஜ், மலேசியா இரட்டை கோபுரம், ஈபிள் டவர், துபாய்யின் பூர்ஜ் காலிஃபா மற்றும் டைனோசர் ஆகியவற்றின் உயரிய கட்டமைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
3. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும் வகையில் நீருற்றுடன் செயற்கையாக குற்றால அருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குளித்து மகிழலாம்.
4. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், ரேஞ்சர், கிராஸ் வீல், கொலம்பஸ், வாட்டர் ரோலர், டோரா டோரா போன்ற 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
5. மேலும் மேஜிக் ஷோ, கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் வீடு, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, 3D தியேட்டர் மற்றும் ஒட்டக சவாரி போன்றவையும் இங்கு உள்ளன.
6. டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சுவையான மீன் வறுவல் போன்ற வகைவகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம். அது மட்டுமின்றி நவீன உணவு வகைகளான நூடுல்ஸ், பிசா, பாஸ்தா, ஷவர்மா, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன.
7. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்படுகிறது. அதனையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
8. உங்களால் நடக்க முடியவில்லை என்றால், சென்னை தீவுத்திடல் முழுக்க சுற்றி காண்பிக்கப்படும் மினி ரயிலில் நீங்கள் ஏறிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ. 20 ஆகும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தீவுத்திடல் கண்காட்சி 2023 டிக்கெட்டுகள்
2023 ஆம் ஆண்டிற்கான தீவு திடல் கண்காட்சி டிக்கெட்டுகளை நேரடியாக அந்த இடத்தில் வாங்கலாம். முரண்பாடுகளைத் தவிர்க்க, அமைப்பாளர் நுழைவுச் சீட்டுகளை நேரலை கவுண்டரில் மட்டுமே வழங்குகிறார். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டால்கள், விளையாட்டுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் மக்கள் அந்தந்த இடங்களில் நேரடியாக வாங்கலாம்.

கட்டணம் மற்றும் திறந்திருக்கும் நேரம்
பெரியவர்களிடம் ரூ. 40, சிறார்களிடம் ரூ. 25 மற்றும் மாணவர்களிடம் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும். பொங்கல் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மீதமுள்ள நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

எதற்காக செல்ல வேண்டும்?
இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும் நீங்கள் இங்க வந்து செல்லலாம். வருகின்ற பொங்கல் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த கண்காட்சிக்கு சென்று வாருங்கள்.

எப்படி செல்வது?
அண்ணா சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள தீவு திடலை மாநகர பேருந்துகள், டாக்சி அல்லது இரு சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இங்கே வந்து, இந்த வார இறுதியை மகிழ்ச்சியாக செலவிடுங்கள்!



Click it and Unblock the Notifications





