செங்கல்பட்டு போன்ற வளர்ச்சி மையங்களின் வளர்ச்சிக்கு பேருந்து முனையம் உதவும், இது சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள வேகமாக வளர்ந்து வரும் நகரம் மற்றும் தெற்கு நோக்கி செல்லும் போக்குவரத்துக்கான மிக முக்கியமான நிறுத்தங்களில் ஒன்றாகும். ஆனால், செங்கல்பட்டுவில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் சிறியதாகும்.
அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்போரூர், தாம்பரம், கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறு பகுதியில் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவஸ்தை படுகின்றனர். இதனால், செங்கல்பட்டுவில் ரூ.97 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது!
செங்கல்பட்டுவில் சிறிய பேருந்து நிலையம்
சென்னைக்கு அடுத்து எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி செங்கல்பட்டு. பணிகள் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக செங்கல்பட்டுவில் இருந்து சென்னைக்கு வர ரயில்கள் மற்றும் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். மாவட்ட தலைநகரான செங்கல்பட்டில் அண்ணா பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தற்போது உள்ள பேருந்து நிலையம் அருகருகே உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பேருந்து நிலைய பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் சிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
14 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம்
இந்த பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென, நீண்டகாலமாக அரசிடம் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், வெண்பாக்கம் கிராமத்தில், 14 ஏக்கர் நிலத்தில், பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
நிலம் கையகப்படுத்துதல் முடிவு
ஆரம்பத்தில், 15.67 ஏக்கர் பரப்பளவிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஆனால் ஆரம்ப முன்மொழிவு கைவிடப்பட்டது மற்றும் சிஎம்டிஏ மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து திட்ட மேலாண்மை ஆலோசகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து 14 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திருத்தப்பட்ட முன்மொழிவு அனுப்பப்பட்டது.
விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்
புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்ததாரர் தேர்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்துகள் சிரமமின்றி உள்ள வரவும், வெளியே செல்லவும் தனித்தனியாக நுழைவு வாயில்கள் ஏற்படுத்தப்படும். இதற்கான இடத்தை அண்மையில் அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகளும், பணிமனையில் 67 பேருந்துகளையும் நிறுத்தலாம்.
செங்கல்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு
மேலும், கார் பார்க்கிங் பகுதியில், 67 கார், மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். மேலும் 30 கடைகள் கட்டப்பட உள்ளன. செங்கல்பட்டு மக்களின், 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், இந்த அறிவிப்பு செங்கல்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறையப்போகும் போக்குவரத்து நெரிசல்
ஒப்பந்ததாரர் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டால் அடுத்த சில மாதங்களில் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற ஆரம்பித்து விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகருக்கு வெளியே இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





