கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலமாக இருப்பது வெள்ளியங்கிரி மலை. தென் கயிலை என பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஏழு மலை முகடுகளை கடந்து தான் செல்ல முடியும். வெள்ளை மேகங்களால் வெள்ளியை உருக்கி வார்த்தது போல் மேகக் கூட்டங்களால் மூடப்பட்டிருக்கும் மலை என்பதால் இதற்கு வெள்ளியங்கிரி மலை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மலையில் ஏராளமான நீர்சுனைகள், கோவில்கள் உள்ளன.

மற்ற மலைகளை போல் நினைத்த போது எல்லாம் இந்த மலைக்கு சென்று விட முடியாது. இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் அனுமதி வழங்கும் மாதங்கள் அல்லத நாட்களில் மட்டுமே இந்த மலையில் ஏறிச் சென்று மலை உச்சியில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும். இரவு நேரங்களில் காட்டு யானைகள், வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் இந்த மலைக்கு பயணம் செய்வதே திகில் அனுபவம் தான். ஆபத்தான மலை என்பதால் இங்கு மலையேறி செல்ல பெண்கள், குழந்தைகளுக்கு தடை உள்ளது.
இந்த ஆண்டு மலைக்காலம் முடிந்து, தற்போது குளிர் காலமும் முடிய துவங்கி விட்டதாலும், பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கோவையை அடுத்த பூண்டி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஏழாவது மழையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கிறார. அவரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவது வழக்கம். வெள்ளியங்கிரி மலை ஏற ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதோடு மலையேறும் பக்தர்களுக்காக சில வழிகாட்டு நெறிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏற திட்டமிட்டிருப்பவர்கள் தங்கள் பயணத்தை துவங்குவதற்கு முன்பு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளியங்கிரி மலை ஏறுவோர் கவனத்திற்கு...
* 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்ப்பது நல்லது. அப்படி சென்றால் மலை ஏற்றத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
* பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும்.
* குடிநீர், உணவு, மருந்து போன்ற தங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.
* டார்ச் லைட், மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட பவர்பேங்க்கள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
* மலையற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளையும் எடுத்து வர வேண்டும்.
* அடிவாரத்தில் உள்ள முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே மலையேற வேண்டும்.
* மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சு வலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல், உடனடியாக மலை அடிவாரத்தில் உள்ள மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும்.
* மலையேறும் பக்தர்கள் வனப் பகுதியின் சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.



Click it and Unblock the Notifications






