தென் தமிழ்நாட்டில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையினால் பல மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் நெல் வயல்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீட்புப் பணியில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் தென் தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!
வரலாறு காணாத கனமழை
சனிக்கிழமை காலை முதலே தென் தமிழக மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
நாகர்கோவிலில் கோட்டாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கோட்டாறு ரயில்வே காலனி பகுதியிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. செம்மண் குளத்தில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் மழைநீர் சூழந்தது. இதனால், வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்தநிலையில், ஒருசில வீடுகளில் சிக்கியிருந்த மக்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் வந்து பாதுகாப்பாக மீட்டனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நான்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் பல ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. நான்கு மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற கலாநிலை காரணமாக அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிரம்பி வரும் அணைகள், ஏரிகள், குளங்கள்
பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 4,000 கனஅடியும், சிற்றாறு அணையிலிருந்து ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர், கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளியாறு ஆகிய ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஊட்டியில் நிலச்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஊட்டியில் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றும் பணியை மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பார்வையிட்டார். தூத்துக்குடியில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்நிலைகளில் உடைப்புகளை சரிசெய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
ஒருவர் உயிரிழப்பு
இடைவிடாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 57 வயதுடைய நபர் ஒருவர் தனது வீடு இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 7 நாட்களுக்கு கனமழை
இதையடுத்து, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை காலை 10 மணி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு மிக மோசமான வானிலையை சுட்டிக்காட்டி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இப்போது அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற செய்தி மக்களை பீதியடைய செய்துள்ளது!



Click it and Unblock the Notifications





