இந்தியாவில் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னமான விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும் வில் வடிவிலான கண்ணாடி பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும், தமிழக அரசின் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன. இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கிறார்!
சுற்றுலாப் பயணிகளை தன் பக்கம் ஈர்க்கும் கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவகம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளச் சின்னங்களாகும். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னங்கள் வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சங்கமத்தின் மத்தியில் கம்பீரமாக நிற்கின்றன. சுவாமி விவேகானந்தர் நினைவகமும், திருவள்ளுவர் சிலையும் ஆன்மீகம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, பார்வையாளர்களுக்கு பிரமிக்கவைக்ககூடிய காட்சிகளையும் ஆழ்ந்த உத்வேகத்தையும் வழங்குகின்றன.

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம்
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை வழங்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் ஏறி இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில், சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி தனியாக படகின் மூலம் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்ல கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.37 கோடி செலவில் வில் வடிவ கண்ணாடி பாலம்
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நடுவில் உள்ள துல்லியமாக கண்ணாடி நடைப்பகுதி அமைக்கும் பணி இறுதியாக நடைபெற்று திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. திருவள்ளுவர் சிலை முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நிலையில் 25 ஆண்டுகளை தொட்டதால் வெள்ளிவிழா நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

ஜொலிக்கும் நினைவுச்சின்னங்கள்
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் இரவில் திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளிக் காட்சி ஒளிரும். கன்னியாகுமரியின் சுற்றுப்புறம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றுலாப் பயணிகள் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் அற்புதமான காட்சியை அனுபவிக்க முடியும். புத்தாண்டை வரவேற்கும் வகையில் விரைவில் திறப்புவிழா காண இருக்கும் கண்ணாடி கூண்டு பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
அனைவரும் வருக
சென்னையின் பல்வேறு மண்டலங்களிலும் இந்த வெள்ளிவிழா மற்றும் கண்ணாடி பலாம் திறப்புவிழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களிலும் கொண்டாட்டங்களை சென்னை மாநகராட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இந்த திறப்புவிழாவை நேரில் காண அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம், திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்தை ஊர் முழுவதும் உள்ள மக்கள் கலந்து கொண்டு விழாக்களில் கலந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications






