தீபாவளி வந்துவிட்டது! எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்கள். அதனை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்குகின்றன. இந்நிலையில் சில குறிப்பிட்ட பொருட் களையெல்லாம் ரயில் பயணத்தில் கொண்டு செல்ல இந்திய ரயில்வே தடை விதித்திருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள்!
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்
சொந்த ஊருக்குச் செல்லும் உற்சாகம் அனைவரின் கண்களிலும் மின்னுகிறது. பெருநகரங்களில் வேலை செய்யும் பெரும்பாலனோர் அந்த நகரங்களை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அந்த பெரும்பான்மையான மக்கள் திரள் இது போன்ற பண்டிகை காலத்தில் தான் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறார்கள். அதற்காகத் தான் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ரயில்களையும், பேருந்துகளையும் பண்டிகை காலங்களில் இயக்குவது வழக்கம்.
ஆபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
ஆனால், இது போன்ற நேரத்தில் தான் நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் கூட்டம் பயணிக்கும் சமயத்தில் ஆபத்துகள் நேராமல் இருக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக தான், ரயில்களில் பயணம் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரயில்வே பட்டியலிட்டுள்ளது. பயணிகள் பயணிக்கும் போதும் வைத்திருக்க முடியாத தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைஇந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை
புதிய வழிகாட்டுதல்களில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்ல முடியாது. பட்டாசுகள், பெட்ரோல், டீசல் போன்ற அதிக ஆபத்துள்ள பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவே, அதனுடன் பயணிக்கக் கூடாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. எரிவாயு அடுப்பு, கேஸ் அடுப்பு போன்றவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் சிறைத் தண்டனை அல்லது அதிக அபராதம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.
பயணிகள் பெட்டியில் அல்லது ரயிலின் உள்ளே எங்கும் சிகரெட்டைப் பற்றவைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ரெயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165-ன் கீழ், பட்டாசு, அடுப்பு, எரிவாயு, பெட்ரோல் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் ரயிலில் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது தவிர, பயணிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.