நம்மில் யாருக்கு தான் பயணம் செய்யவும் சுற்றுலா செல்லவும் பிடிக்காது, அனைவருக்குமே பிடிக்கும். நம்மில் பலரும் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆசியாவிலேயே 'இரண்டாவது நம்பிக்கையான பயணிகளாக' இந்தியர்களாகிய நாம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்! எதனால் தெரியுமா?

அதிகரித்த சுற்றுலா விழிப்புணர்வு
இப்பொழுதெல்லாம் சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதிக காசு, பணம், சொத்து சேர்த்து வைப்பதோடு வாழ்க்கையை இருக்கும் போதே நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவது, பிடித்த உடைகளை வாங்குவது, பல இடங்களுக்கு சுற்றுலா செல்வது என வாழ்க்கையை திறம்பட வாழ்ந்து வருகிறோம். அதுதான் சரியான அணுகுமுறையும் கூட!
Booking.comஇன் கணக்கெடுப்பு
சமீபத்தில், புகழ்பெற்ற பயண நிறுவனமான Booking.com, ஆசிய பசிபிக் அல்லது APAC பிராந்தியங்களில் நம்பிக்கையுடன் பயணிப்பவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டது. இந்த குறிப்பிட்ட கணக்கெடுப்பு APAC நாடுகளில் மொத்தம் 11 பயணச் சந்தைகளை ஆய்வு செய்தது.
பயணத் திட்டங்களை தெளிவாக திட்டமிடும் இந்தியர்கள்
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் எதிர்கால பயணத் திட்டங்களைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதால், பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான இந்தியர்கள் சிக்கலான உலகளாவிய சவால்களால் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. எதைப்பற்றியும் யோசித்து நேரத்தை வீணாக்காமல் இருக்கும் போதே பல இடங்களையும் கண்டு களித்திட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்தியர்களின் எண்ணமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

11 நாடுகளில் ஆய்வு
அவர்கள் APAC (ஆசியா பசிபிக்) பயண நம்பிக்கைக் குறியீட்டின் (TCI) கணக்கெடுப்பை மேற்கொண்டனர், அங்கு APAC பயணிகளின் மனநிலையைப் பற்றி அறிக்கை பேசுகிறது. கணக்கெடுக்கப்பட்ட 11 APAC சந்தைகளில், ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாத இந்தியர்கள்
பணவீக்கம், புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, காலநிலை மாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் உள்ளிட்ட சிக்கலான உலகளாவிய சவால்கள் பயணத்தை பாதித்துள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு ஆராய்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது: 86% இந்திய பயணிகள் தங்கள் எதிர்கால பயணத் திட்டங்களைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளனர், அதே நேரத்தில் 61% பேர் அடுத்த 12 மாதங்களில் தங்கள் பயணத் திட்டங்களை தாமதப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் கூறுகிறது.
டிராவல் பட்ஜெட்டை அதிகரிக்க விருப்பம்
இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த பயணிகளில் 59% பேர் தாங்கள் எடுக்கும் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றால், பராமரிக்க விரும்புகிறார்கள், மேலும் 68% பேர் வரவிருக்கும் ஆண்டிற்கான தங்கள் பயண செலவு பட்ஜெட்டை அதிகரிக்க விரும்புகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
எந்த சவால்களும் எங்களை ஒன்றும் செய்யாது
இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மேலாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், "உலகளாவிய மற்றும் பொருளாதார தடைகள் இருந்தபோதிலும், பயணிகளிடையே நேர்மறை மற்றும் உற்சாக உணர்வு நிலவுகிறது என்பதை கணக்கெடுப்பு தெளிவாக நிரூபித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

வெளிநாடுகளை விட இந்தியாவையே அதிகம் விரும்பும் இந்தியர்கள்
கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 43% இந்திய பயணிகள் தங்கள் சொந்த நாட்டை ஆராய்வதில் வலுவான விருப்பம் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 71% பேர் வட இந்தியாவையும், 60% தென்னிந்தியாவையும், 41% மேற்கு இந்தியாவையும், 37% வடகிழக்கு இந்தியாவையும், 16% கிழக்கு இந்தியாவையும் 13% மத்திய இந்தியாவையும் ஆராய விரும்புகிறார்கள்.
வித விதமாக சுற்றுலாவில் நாட்டம்
பயண அனுபவங்களைப் பற்றி பேசுகையில், 67% இந்திய பயணிகள் கடற்கரைகள் 63% உணவு மற்றும் சாப்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து 57% இயற்கை இடங்களை நோக்கி நாட்டம் காட்டுகின்றனர்.
தரவரிசையின் முழு பட்டியல் இங்கே
1. ஹாங்காங்
2. இந்தியா
3. சீனா
4. சிங்கப்பூர்
5. தைவான்
6. ஆஸ்திரேலியா
7. நியூசிலாந்து
8. கொரியா
9. ஜப்பான்
10. வியட்நாம்
11. தாய்லாந்து
இதனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?



Click it and Unblock the Notifications





