இந்தியாவிலேயே முதன்முதலாக கடலுக்கு மேலே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு நம் தமிழகத்தில் வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது! தமிழகத்தின் ஏன், இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி கடற்கரையை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வசதியாக விவேகானந்தர் பாறையிலிருந்து, திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் விதமாக கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்! இந்நிலையில் இந்த பாலம் மீது செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது!

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் வெள்ளிவிழா கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கன்னியாகுமரியில் கோலாகலமாக தொடங்கியது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை --விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
படகில் நினைவுச்சின்னங்களை சுற்றிப் பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகள்
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை வழங்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் ஏறி இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில், சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி தனியாக படகின் மூலம் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்ல கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

விவேகனந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
விவேகானந்தர் நினைவிடம் அமைந்திருக்கும் பாறையோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை உயரம் குறைவானது. ஆகவே, கடல் கொந்தளிப்பாக இருக்கும்போதும் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போதும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வு இருந்தால் நன்றாக இருக்குமென்று சுற்றுலாப் பயணிகள் கூறி வந்தனர், அதே போல திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டு ஆவதையொட்டி நினைவுச்சின்னம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது, அதற்காக 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதன்முதல் கடல் பாலம்
இரு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்திற்கான வளைவு 11 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பத்து மீட்டர் அகலமுள்ள பாலத்தின் கவனம் ஈர்க்கும் அம்சமாக, அதன் நடுவில் 2.4 மீட்டர் அகலத்திற்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, பாலத்தின் மீது நடந்து செல்பவர்கள் அதன் வழியாக கீழே கடலைப் பார்க்க முடியும்.

நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுமா?
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சவாரி செல்ல ரூ.75 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதிலேயே, சிறப்பு வரிசை கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. விவேகானந்தர் பாறையையும், மண்டபத்தையும் சுற்றிப்பார்க்க விவேகானந்தா கேந்திரா சார்பில் ரூ.30 கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் மூலம் நடந்து செல்வதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும், படகு சவாரிக் கட்டணத்துடன் இதை சேர்த்து மொத்தமாக வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கண்ணாடி இழைப் பாலம் வழியாக சென்று வர சுற்றுலாப் பயணிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?



Click it and Unblock the Notifications






