இந்தியாவின் புகழ்பெற்ற சொகுசு ரயில்களில் ஒன்றான "பேலஸ் ஆன் வீல்ஸ்" இப்பொழுது மறுபடியும் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேலஸ் ஆன் வீல்ஸ் செப்டம்பரில் இருந்து இயக்கப்படும் என ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா தொற்றால் நிறுத்தப்பட்ட சேவை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது.
இப்போது, நாடு முழுவதும் சுற்றுலா முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதால், ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பார்வையாளர்களை ஈர்க்கவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மீண்டும் சொகுசு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.
ஆடம்பரமான பேலஸ் ஆன் வீல்ஸ் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வேயுடன் மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இனைந்து நடத்தபட்டு வருகிறது. மகாராஜாக்கள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களால் ஈர்க்கப்பட்ட இந்த ரயில், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கண்டு களிப்பதோடு பயணிகளுக்கு மிகவும் வசதியான தங்குமிடத்தையும், உணவுகளையும், பல அதி நவீன வசதிகளையும் வழங்குகிறது.

ராயலான “பேலஸ் ஆன் வீல்ஸ்”
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சொகுசு ரயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் அரச விருந்தோம்பல் மற்றும் உயர்தர சேவைக்கு பெயர் பெற்ற மிகச்சிறந்த சொகுசு ரயில்களில் ஒன்றாகும்.
சக்கரங்களில் நகரும் அரண்மனை போன்ற இந்த ரயிலில் பயணிகளுக்கான ராஜ உடைகள், பாரம்பரியமாக உடையணிந்த ஊழியர்கள், தொலைக்காட்சி பெட்டிகள், ஆடம்பர குளியலறைகள், தனிப்பட்ட உதவியாளர்கள், பல வகை உணவுகள் மற்றும் ஆயுர்வேத ஸ்பா என அனைத்து வசதிகளும் உண்டு.
ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் டெல்லி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்வாய் மாதோபூர், சித்தோர்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ராவை சுற்றி பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு சுமாராக 2 லட்சம் வரை ஆகிறது.

மீண்டும் தொடங்கப்படும் பேலஸ் ஆன் வீல்ஸ்
சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள பர்யாதன் பவனில் ராஜஸ்தானின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தபோது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவர் "தொற்றுநோய் தொடங்கியதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சொகுசு ரயில் இயக்கப்படவில்லை. இப்போது அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வந்தமையால் மாநில அரசும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் ராஜஸ்தானில் மிகவும் விரும்பப்படும் விஷயங்களில் ஒன்றான இந்த ரயிலை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளோம்" என கூறினார்.
பொது-தனியார் கூட்டுறவில் மீண்டும் ரயிலை கொண்டு வர ஆர்வமாக உள்ளதாகவும், அதற்காக நிறுவனத்துடனான சந்திப்புகள் தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளன என்றும் அவர் கூறினார். பேலஸ் ஆன் வீல்ஸ் நிச்சயமாக மாநிலத்தின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுலாத் தயாரிப்புகளில் ஒன்றாகும், மேலும் ராஜஸ்தான் அதன் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படி பேலஸ் ஆன் வீல்ஸ் மறுபடியும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இயக்கப்படும்.
இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் மிகவும் பிரபலமான, இந்த ஆடம்பர ரயில் திரும்பி வருவது என்பது, நிச்சயமாக ராஜஸ்தானின் சுற்றுலாவை ஆதரித்து பொருளாதாரத்தை உயர்த்தும் என நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications





