திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களான பழனி மலை முருகன் கோவில் மற்றும் கொடைக்கானல் இடையே ரோப்வே சேவை தொடங்கப்படவுள்ளது. சீசன் காலத்தில் கொடைக்கானலுக்கும், ஆண்டு முழுவதும் பழனி மலைக்கும் லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த இரு இடங்களுக்கு இடையேயான ரோப்வே சேவை சுற்றுலாப் பயணிகள் இடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த ரோப்வே திட்டங்கள்
அடுத்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 90 கிமீ நீளமுள்ள 18 ரோப்வே திட்டங்களை பல்வேறு மாநிலங்களில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்ரீநகர், சங்கராச்சாரியார் கோவில், ஸ்ரீசைலம், உஜ்ஜைன் மஹாகாளேஷ்வரர் கோவில், வாரணாசி, கேதார்நாத், பழனி - கொடைக்கானல் இடையே என நாடெங்கிலும் ரோப்வே சேவைகள் தொடங்கப்பட உள்ளது.

மிக நீளமான ரோப் கார் சேவை
இதில் குறிப்பாக தமிழகத்தில் வரவிருக்கும் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் மலைத்தொடர்ச்சியின் மேற்கு பகுதி வரை ரோப்வே திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடெங்கிலும் அறிவித்துள்ள சேவையில் 12 கிமீ தூரம் உள்ள இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ரோப் கார் சேவையே மிக நீளமான ரோப்வே சேவையாகும்.

ஆய்வு செய்த ஆஸ்திரயக் குழு
இதற்காக நாடெங்கிலும் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் முதற்கட்ட ஆய்வு செய்ய ஆஸ்திரியா நாட்டில் இருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆய்வில் பழனி மலை மற்றும் கொடைக்கானல் மலைகள், குரூப் கார் ஸ்டேஷன் அமையும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வல்லுநர் குழுவுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கரசுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவடையும் பணி
பழனியிலிருந்து கொடைக்கானலுக்கான ரோப்வே சேவைக்கான முழு பணிகளும் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 100 முதல் 1000 பயணிகள் ரோப் காரில் பயணம் செய்யலாம். பழனி - கொடைக்கானல் இடையேயான ரோப் கார் சேவை சுற்றுலாப்பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வருவாய் கூட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





