நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை 1 பிறந்ததையொட்டி கேரளா மற்றும் தமிழகத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில்கள் களைக்கட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த புனித மாதத்தில் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது மிகவும் விசேஷமாகும். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வனவிலங்குகளிடமிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு ஒரு அட்டகாசமான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது! நீங்கள் சபரிமலை செல்லும் போது கட்டாயம் அந்த செயலியை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்!

திறக்கப்பட்ட சபரிமலை நடை
கேரளாவில் பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நவம்பர் 17ஆம் காலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
படையெடுக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17 முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, 41 நாட்களளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடக்க உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளதால் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவசம் போர்டு அறிமுகப்படுத்திய புதிய செயலி
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ள இந்த செயலி உதவும்.

வனவிலங்கு நடமாட்டம், மருத்துவ வசதி, அவரச உதவிகளுக்காக செயலி
இந்த செயலி மூலம் வனப் பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், உடனடி மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக பெருவழிப் பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வனப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஆண்டு தோறும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை மொத்தம் 2 மாதங்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



Click it and Unblock the Notifications






