கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் கூலான இடங்களுக்கு செல்ல தான் விரும்புவார்கள். அதிலும் குழந்தைக்கு சம்மர் லீவை ஜாலியாக கழிக்க மலைப் பிரதேசங்களுக்கு பலரும் டிரிப் பிளான் செய்வார்கள். தமிழகத்தில் மலைப் பிரதேசங்கள், அதுவும் குறைந்த பட்ஜெட்டில் டிரிப் செல்ல வேண்டும் என்றால் பெரும்பாலானவர்களின் தேர்வு ஊட்டி மற்றும் கொடைக்கானலாக தான் இருக்கும்.

ஒருவேளை இந்த சம்மர் லீவுக்கு நீங்கள் குடும்பத்துடன் ஊட்டி போக பிளான் செய்திருந்தால் உங்களுக்காக குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். ஊட்டியில் இருந்து குன்னூர் செல்வதற்கு மலை ரயில் வசதி உள்ளது அனைவருக்கும் தெரியும். கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி துவங்கி, ஜூன் 07ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஊட்டி முதல் குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் 5 பெட்டிகளை கொண்டதாகும். மொத்தம் 210 இருக்கைகளை கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளும் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 08.20 மணிக்கு புறப்படும் மலை ரயில் காலை 09.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும். மீண்டும் மாலை 04.45 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்படும் ரயில் மாலை 05.55 மணிக்கு ஊட்டி சென்றடையும்.
ஊட்டி முதல் கேத்தி வரையிலான சிறப்பு ரயில் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும். ஊட்டியில் இருந்து ஒரு நாளைக்கு 6 முறை கேத்திக்கு மலை ரயில் இயக்கப்படும். காலை 09.45, 11, 11.30, பகல் 01.10, 3, மாலை 04.30 ஆகிய நேரங்களில் மலைரயில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கோடை விடுமுறை சீசனில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி-குன்னூர்-மேட்டுபாளையம் வழித்தடத்தில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மலைகளின் அழகை ரசித்த படி பயணிக்கும் இந்த மலை ரயில் பயணம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கக் கூடியதாக இருப்பதால் அதிகமான பயணிகள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுவதுண்டு.



Click it and Unblock the Notifications






