தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 963 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 வழி சாலைகள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் குறித்த விவரங்களை அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) தோராயமாக ரூ.20,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளன.
சாலை கட்டமைப்பில் வட மாநிலங்களை விட பின் தங்குகிறதா தமிழகம்?
இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. அங்கு இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழகம் பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, விவசாய நிலங்களில் சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக உள்ளது.

தமிழகத்தின் சாலைகள் எத்தனை?
இந்த புதிய சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2735 கிலோமீட்டர் இருந்து 3698 கிலோ மீட்டராக உயரும். தமிழ்நாட்டில் மொத்த தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 6,805 கி.மீ ஆக தற்போது இருக்கிறது, இதில் 1,282 கி.மீ இருவழிச் சாலைகள், 2,383 கி.மீ இருவழிச் சாலைகள், 384 கி.மீ ஆறு வழிச் சாலைகள் மற்றும் 21 கி.மீ எட்டு வழிச் சாலைகள் அடங்கும்.
கூடிய விரைவில் திறக்கப்படும் சாலைகள்
இந்தத் திட்டங்களில் மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலை (106 கி.மீ), திண்டுக்கல்-பொள்ளாச்சி (131.9 கி.மீ), நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை (65 கி.மீ), விழுப்புரம்-நாகப்பட்டினம் (125 கி.மீ), விக்கிரவாண்டி-தஞ்சாவூர் (163 கி.மீ), குடிபாலா முதல் ஸ்ரீபெரும்புதூர் (பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை) (106 கி.மீ) ஆகியவை அடங்கும். கூடுதலாக, திண்டுக்கல்-தேனி-குமுளி (135 கி.மீ) மற்றும் நேரலுரு-தொரப்பள்ளி அக்ரஹாரம்-ஜித்தண்டஹள்ளி (60 கி.மீ) சாலைகள் 20-30% நிறைவடைந்துள்ளன.

விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு-சோழவரம்
இதேபோல், கடந்த ஆறு ஆண்டுகளாக தாமதமாகி வந்த விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு-சோழபுரம்-தஞ்சாவூர் (164 கி.மீ) திட்டம் ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவில் 47 கி.மீ. நிறைவடைந்துள்ளது, சமீபத்தில் வேம்பக்குடி (பாபநாசம்) இல் ஒரு சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கிடையில், விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு மற்றும் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவுகளின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக வசூல் செய்யும் சுங்கச்சாவடிகள்
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்யும் முதல் ஐந்து சுங்கச்சாவடிகள் தொப்பூர் எல் அண்ட் டி (கிருஷ்ணகிரி - தும்பிபாடி), கிருஷ்ணகிரி (ஓசூர் - கிருஷ்ணகிரி), விக்கிரவாண்டி (தாம்பரம் - திண்டிவனம் ஓமலூர் (ஓமலூர் - நாமக்கல்) மற்றும் பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை) ஆகும். அவற்றில், தொப்பூர் 2014-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.1,945 கோடி வசூலித்தது, அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி ரூ.1,636 கோடி, விக்கிரவாண்டி ரூ.1,290 கோடி, ஓமலூர் ரூ.1,040 கோடி, பள்ளிகொண்டா ரூ.1,002 கோடி வசூலித்தது.
உயரும் சுங்கச்சாவடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், 2014 முதல் 2024 வரை தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.26,000 கோடி சுங்க வரி வசூலித்ததைக் காட்டுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, 90 ஆக உயர வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒப்பந்தம் காலாவதியான பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வப்போது அதிகரிக்கப்படும் கட்டணத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை முட்டுகிறது.



Click it and Unblock the Notifications






