வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட அதிக வேக விரைவு ரயில்களை போலவே இனி அனைத்து ரயில்களின் வேகத்தையும் படிப்படியாக உயர்த்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம்-விருத்தாச்சலம் இடையே இந்த திட்டத்தின் சோதனை உள்ளது.

விழுப்புரம் - விருத்தாசலம் இடையே ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீட்டராக அதிகரிக்கும் திட்டம் தற்போது தயார் நிலையில் உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், ரயில் போக்குவரத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும் இந்த வேக அதிகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணியில் பழைய பாலங்களை சீரமைப்பது, வளைவுகளை நீக்குவது மற்றும் பழைய ரயில் பாதைகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் நிறைவடைந்தவுடன், இந்த வழித்தடத்தில் ரயில்கள் 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுப்புரம் - திருச்சி இடையே உள்ள ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளில் பழைய மற்றும் பலவீனமான பாலங்களை முழுமையாக சீரமைப்பது, தண்டவாளங்களில் உள்ள வளைவுகளை சரி செய்வது அல்லது நீக்குவது, மற்றும் தற்போதுள்ள பழைய ரயில் பாதைகளுக்கு பதிலாக புதிய, அதிவேகத்திற்கு ஏற்ற தண்டவாளங்களை அமைப்பது ஆகியவை அடங்கும்.
இந்த பணிகள் நிறைவடைந்தவுடன், விழுப்புரம் - விருத்தாசலம் வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் சீராக இயக்கப்படும். இது மட்டுமின்றி, தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆறு முக்கிய ரயில்வே கோட்டங்களிலும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும்.
ரயில்களின் வேகத்தையும் படிப்படியாக அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பது, தற்போதுள்ள ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் 2025-ல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மித அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முதற்கட்டமாக சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் (167 கி.மீ), சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் (140 கி.மீ) மற்றும் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் (185 கி.மீ) ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்களில் நடத்தப்பட உள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், இந்த வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில்கள் எதிர்காலத்தில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
விழுப்புரம் - விருத்தாசலம் வழித்தடத்தில் வேக அதிகரிப்பு திட்டம் தயாராக இருப்பது இப்பகுதி மக்களுக்கும், இப்பகுதி வழியாக செல்லும் பயணிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த மேம்பாடுகள் ரயில் பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, 30 முதல் 45 நிமிடங்கள் நேரம் மிச்சமாகும். இருவழி ரயில் பாதை அமைக்கப்பட்டதால் எதிரெதிர் திசைகளில், சிக்னல் பிரச்னை இல்லாமல் தென்மாவட்ட ரயில்கள் குறித்த நேரத்திற்கு செல்கின்றன. மேலும், 130 கி.மீ., வேகத்திற்கு ரயில்கள் இயங்கினால், தலைநகர் சென்னையில் தங்குவதை தவிர்த்து, தினசரி சென்று வர முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேயின் இந்த தொடர்ச்சியான முயற்சிகள், தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications






